Page Loader
செந்தில் பாலாஜியின் மனைவி வழக்கு: நீதிபதி விலகியதால் புதிய அமர்வு அறிவிப்பு
பணமோசடி வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜியின் மனைவி வழக்கு: நீதிபதி விலகியதால் புதிய அமர்வு அறிவிப்பு

எழுதியவர் Sindhuja SM
Jun 14, 2023
03:36 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி எஸ்.மேகலாவின் மனுவை இன்று விசாரிக்க இருந்த நீதிபதி விலகியதால், தற்போது ஒரு புதிய அமர்வை சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பணமோசடி வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து, அவரது மனைவி எஸ்.மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில், "கைது குறித்து எங்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்படவில்லை. விசாரணையின் போது என் கணவர் தாக்கப்பட்டுள்ளார். கைது நடவடிக்கை நடந்த போது சட்ட விதிகள் எதுவும் பின்பற்றப்படவிலை." என்று கூறப்பட்டுள்ளது.

சிந்தி

புதிய அமர்வுக்கு மாற்றப்பட்ட ஆட்கொணர்வு  மனு

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தை நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மதியம் விசாரிக்கும் என்று கூறியது. இன்று மதியம் 2:15 மணிக்கு இந்த மனு விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதை விசாரிக்க இருந்த நீதிபதி ஆர்.சக்திவேல் என்பவர் இதிலிருந்து விலகினார். இதனையடுத்து, ஒரு புதிய அமர்வில் இந்த மனு பட்டியலிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார். இதற்கிடையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.