சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், முதல்வரை சந்தித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் கன மழையை கொட்டி தீர்த்தது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மெதுவாக வெள்ளநீர் வடிந்து தலைநகர் மீண்டும் இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பி வரும் நிலையில், புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தார். ஆவடி விமானப்படை தளத்திலிருந்து விமான மூலம் மழைவெள்ள பாதிப்புகளை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். மத்திய இணையமைச்சர் எல் முருகன் உடனிருந்தார்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளால் பிரதமர் வேதனை அடைந்துள்ளார்
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராஜ்நாத் சிங், "தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளால் பிரதமர் நரேந்திர மோடி வேதனை அடைந்துள்ளார்" என தெரிவித்தார். "தற்போதைய நெருக்கடிக்கான நிலையை அவர் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசியுள்ளார்." "இங்குள்ள நிலவரத்தை நேரில் கண்காணிக்க பிரதமர் எனக்கு உத்தரவிட்டுள்ளார்." "ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, வானிலை ஆய்வுத்துறை ,தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட மத்திய நிறுவனங்கள் தற்போதைய, புயல் பாதிப்பில் இருந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள தங்களால் முடிந்தவற்றை செய்து வருகிறார்கள்" என தெரிவித்தார்.
வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு நிதி விடுவிப்பு
தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நிதி விடுவித்துள்ளதாக குறிப்பிட்டார். "தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை பிரதமர் சார்பாக உறுதியளிக்கிறேன்." "தமிழ்நாடு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு இரண்டாம் தவணையாக ₹450 கோடியை வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்." "மாநில பேரிடர் மேலாண்மை நிதிக்கான மத்திய பங்கின் முதல் தவணை ₹450 கோடி முன்னதாக விடுவிக்கப்பட்டது." "நகர்ப்புற வெள்ளப் பிரச்சினையை சென்னை சமீப ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் கண்டுள்ளதால், நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்காக இந்திய அரசு ₹500 கோடி மத்திய நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது" என தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்
தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் ஸ்டாலின், புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மெல்ல மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தெரிவித்தார். மேலும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார். தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த பெருமழையிலும் உயிரிழப்புகளும், பொருட்சேதமும் குறைக்கப்பட்டுள்ளது என முதல்வர் பேசினார். பின்னர், வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசிடம் ₹5,060 கோடி கேட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய முதல்வர், இடைக்கால நிவாரண நிதியாக ₹450 கோடி விடுவிக்கப்பட்டதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக ஒன்றிய குழு, சென்னை வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
விமான மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் அமைச்சர் ராஜ்நாத் சிங்
#WATCH | Defence Minister Rajnath Singh conducts an aerial survey of flood-affected areas of Tamil Nadu #CycloneMichuang pic.twitter.com/dmXUSpJS2c— ANI (@ANI) December 7, 2023