திராவிடம் புறக்கணிப்பு; ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிட அடையாளம் தொடர்பான வரிகள் விடுபட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. சென்னையில் டிடி தமிழ் தொலைகாட்சி நடத்திய இந்தி தின கொண்டாட்டத்தில் நடந்த இந்த சம்பவம் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகளின் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. இந்தியை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கலந்துகொண்ட நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரி விடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. திராவிட பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் விடுபட்டதாக கூறப்படும் நிலையில், அதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
திராவிடநல் திருநாடும் வரிகள் புறக்கணிப்பா?
தமிழக முதல்வர் கண்டனம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்! திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!" என கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.