DPI வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு வெண்கல சிலை; முதலமைச்சர் திறந்து வைத்தார்
தி.மு.க-வின் காலஞ்சென்ற முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. அன்பழகன் நினைவாக, DPI வளாகத்தினை, 'பேராசிரியர் அன்பழகன் வளாகம்' என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அதோடு, அவருக்கு, அதே வளாகத்தில், வெண்கல சிலை நிறுவப்படும் எனவும் அறிவித்திருந்தார். இதற்காக வளாகம் சீரமைக்கப்பட்டு, சிலை அமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், பேராசிரியர் அன்பழகனின் 8½ அடி உயர சிலை, தயாரானதை ஒட்டி, இன்று காலை, முதலமைச்சர் திறந்து வைத்தார். அங்கே வைக்கப்பட்டிருந்த அன்பழகனின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சருடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.