ராணிப்பேட்டை பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதியுதவி: முதலமைச்சர் ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
நேற்று தீபாவளி பண்டிகை பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
வெடி வெடிக்கும் போது கவனத்துடன் இருக்க தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்த போதும், மாநிலம் முழுவதும் பல அசம்பாவிதங்கள் நடந்துள்ளன.
அதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில், 4 வயது சிறுமி பட்டாசு வெடித்தபோது உயிரிழந்தது, தமிழகத்தை உலுக்கியுள்ளது.
ராணிப்பேட்டை அடுத்துள்ள மாம்பாக்கம் பகுதியில் நவிஷ்கா என்ற பெயர்கொண்ட சிறுமி, பட்டாசு வெடித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பட்டாசுகள் அடுத்தடுத்து அந்த சிறுமி மீது விழுந்து தீ பிடிக்க, மருத்துவமனை செல்லும் வழியிலேயே அச்சிறுமி பரிதமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.
card 2
முதலமைச்சர் அறிக்கை
முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிவிப்பில், "ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதி, திமிரி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் சிறுமி நவிஷ்கா (வயது 4) த/பெ. ரமேஷ் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாயும், இவ்விபத்தின்போது பலத்த காயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு ஒரு லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.