சென்னை கிண்டி மருத்துவமனை: இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார்
கடந்த 2021ம்ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், புதிதாக பல்நோக்கு மருத்துவமனை கட்டப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, 6 தளங்கள் கொண்ட, 3 கட்டிடங்கள், 4.89ஏக்கர் நிலத்தில், சுமார் 51,429ச.மீ.,பரப்பளவில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையினை தமிழக அரசு கட்டியுள்ளது. இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களை நேரில் சந்தித்து மருத்துவமனையினை திறந்து வைக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். ஜூன் 5ம் தேதி இதன் திறப்புவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி அந்த தேதியில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவிருந்ததால், இந்த நிகழ்வானது ரத்தானது.
முதலமைச்சர் திறக்கவிருக்கும் புதிய பல்நோக்கு மருத்துவமனை
அது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின், தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட ஒரு ட்வீட்டின் படி, "அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'! " எனக்கூறியுள்ளார். இன்று மாலை 6 மணிக்கு நடக்கவிருக்கும் இந்த திறப்பு விழாவிற்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருக்க, முதல்வர் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற துறை அமைச்சர்களும், MLA க்களும் விழாவில் பங்கேற்க உள்ளனர்.