அங்கீகரிக்கப்படுமா ஒரே பாலின திருமணங்கள்: ஏன் இந்த போராட்டம்
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை(ஏப் 18) உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க உள்ளது. செப்டம்பர் 2018இல், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, இந்திய தண்டனைச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவு 377இன் சில பகுதிகளைத் நீக்கி, ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொள்வது குற்றமற்றது என்று கூறியது. "LGBT மக்களும் அவர்களது குடும்பத்தினரும் எதிர்கொண்ட இழிவுகளுக்கு வரலாறு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அப்போது உச்ச நீதிமன்றம், பால்புதுமையினர்(LGBTQIA+) எதிர்கொள்ளும் கஷ்டங்களுக்கு வருத்தம் தெரிவித்திருந்தது. அதுவரை தன்பாலின ஈர்ப்பாளர்களாக பிறந்தவர்கள் சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகளாக கருதப்பட்டனர்.
தன் பாலின ஈர்ப்பு ஒரு நோயல்ல: இந்திய மனநல சங்கம்
1975களுக்கு முன் உலகெங்கிலும் உள்ள அறிவியல் அறிஞர்கள் தன்பாலின ஈர்ப்பாளர்களை மனநல குறைபாடுகள் உள்ளவர்களாக கருதினர். அதன்பிறகு, ஏற்பட்ட தொழிநுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சியால், தன் பாலின ஈர்ப்பு என்பது இயற்கையான ஒரு விஷயம் என்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அது ஒரு மனநல குறைபாடு அல்ல என்று உலக அறிஞர்கள் ஏற்றுக்கொண்டனர். "தன் பாலின ஈர்ப்பு ஒரு நோயல்ல" என்று ஒரு வாரத்திற்கு முன் இந்தியாவின் முன்னணி மனநலக் குழுவான இந்திய மனநல சங்கம்(IPS) ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. தோராயமாக, இந்தியாவில் சுமார் ஏழு கோடி பால்புதுமையினர் வாழ்கின்றனர். நாட்டையே திருப்பி போடும் ஒரு முக்கிய தீர்ப்பை நாளை உச்சநீதிமன்றம் வழங்க இருக்கும் நிலையில், மொத்த உலகின் கவனமும் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.