காதலியை கொன்று, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த நபரால் சென்னையில் பரபரப்பு
சென்னையில் இரண்டாம் ஆண்டு செவிலியர் பட்டப்படிப்பு படித்து வந்த பவுசியா என்ற மாணவியை அவரது காதலர் கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த 20 வயதான பவுசியா, ஆஷிக்(20) என்ற நபரை 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
டி-ஷர்ட்டால் தனது காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற ஆஷிக்
பவுசியா, குரோம்பேட்டையில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஆஷிக் சென்னைக்கு வந்ததை அடுத்து, அஷிக்கும் பவுசியாவும் குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருக்கின்றனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆஷிக் தன் டி-ஷர்ட்டால் தனது காதலியின் கழுத்தை நெரித்து கொன்றார்.
ஆஷிக் எப்படி சிக்கினார்?
அதன் பிறகு, பவுசியாவின் உயிரற்ற உடலை புகைப்படம் எடுத்த அவர், தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக அந்த படத்தை வைத்திருக்கிறார். அந்த ஸ்டேட்டஸை பார்த்து அதிர்ச்சி அடைந்த பவுசியாவின் தோழிகள், உடனடியாக போலீஸுக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தப்பி செல்ல முயன்ற ஆஷிக்கை கைது செய்தனர். அதனையடுத்து நடந்த விசாரணையின் போது. ஆஷிக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
16 வயதில் குழந்தை பெற்று கொண்ட ஆஷிக்-பவுசியா ஜோடி
விசாரணையில் மேலும் சில முக்கிய தகவல்களும் வெளியாகி உள்ளது. 5 வருடமாக காதலித்து வந்த ஆஷிக்-பவுசியா ஜோடி, 16 வயதிலேயே சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டனராம். அதன் பிறகு, அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்திருக்கிறது. அதனையடுத்து, 18 வயதுக்கு கீழுள்ள பெண்ணை திருமணம் செய்ததால், ஆஷிக் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவர்களது குழந்தையை அதிகாரிகள் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
வேறு பெண்களுடனும் தொடர்பு வைத்திருந்த ஆஷிக்
அண்மையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆஷிக், பவுசியாவை தொடர்ந்து சந்தித்து பேசி வந்திருக்கிறார். பவுசியாவை தவிர வேறு சில பெண்களுடனும் ஆஷிக் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் சென்னை வந்த ஆஷிக், பவுசியாவுடன் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருக்கிறார். அப்போது, வேறு பெண்களின் புகைப்படங்களை ஆஷிக்கின் மொபைலில் பார்த்த பவுசியா, தனது காதலனுடன் சண்டையிட்டிருக்கிறார். அந்த தகராறின் போது கோபமடைந்த ஆஷிக், தன் டி-ஷர்ட்டால் தனது காதலியின் கழுத்தை நெரித்து கொன்றார்.