சென்னை மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழைநீர் ஏன் தேங்கியது?- மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
சென்னையில் நேற்று(நவ.,29) மாலை முதல் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மேற்கு மாம்பலம், அம்பத்தூர், அண்ணாநகர், தியாகராய நகர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, சென்னையில் 145 இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில் 68 இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் தண்ணீர் வடிகால்களில் உள்வாங்காத காரணத்தினால் நீர் தேக்கமடைந்துள்ளது என்று கூறியுள்ளார். தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு வரும் புகார்கள் மீதான உடனடி நடவடிக்கைகள் அனைத்துமே எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் சென்னையில் மீட்புப்பணியில் களமிறங்க கமாண்டோ படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மழைநீர் தேக்கம் குறித்து பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம்
மேலும் செம்பரப்பக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள உபரி நீர் அடையாறில் அதிகம் வருவதால், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வடிகால்களில் செல்லும் நீர் கடலில் சென்று சேருவதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாகவே நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அந்த தண்ணீர் வடிந்தோடும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இவரையடுத்து, பேட்டியளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியம், "நேற்று காலை முதல் சென்னையில் பெய்ய துவங்கிய நிலையில் 10 செ.மீ., முதல் 25 செ.மீ.,அளவிலான மழை பதிவாகியுள்ளது" என்று கூறியுள்ள அவர், 'கால்வாய்கள் தூர்வாரப்பட்ட காரணத்தினால் சென்னையில் பெருமளவு வெள்ளம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது' என்றும் கூறியுள்ளார். ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீரும் விரைவில் வடிந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.