ஐபிஎல் சீசினில் மட்டும் 12 மில்லியன் பிரியாணி ஆர்டர்கள்.. ஸ்விக்கியின் புதிய ட்வீட்!
நேற்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 சீசினிஸ் 5வது முறையாக பட்டம் வென்று மும்பை இந்தின்ஸின் சாதனையை சமன் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தியாவில் மற்றொரு சாதனையும் நிகழ்த்தப்பட்டிருப்பதாக தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி. இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 12 மில்லியன் பிரியாணி ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாகவும், ஒரு நிமிடத்திற்கு 212 பிரியாணிக்கள் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் தங்களுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறது ஸ்விக்கி நிறுவனம். விழாக்காலங்களில் இது போன்று குறிப்பிட்ட உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்கள் அதிகளவில் ஆர்டர் செய்வது வழக்கம். இது போன்று இதற்கு முன்னரும் பலமுறை குறிப்பிட்ட காலத்தில் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைக் குறிப்பிட்டிருக்கிறது ஸ்விக்கி.
அதிகம் விரும்பப்படும் உணவுப் பொருட்கள்:
2020-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎஸ் சீசனின் போது சிக்கன் பிரியாணி, பட்டர் நான் மற்றும் மசாலா தோசைகளின் ஆர்டர்கள் 30% வரை உயர்ந்ததாகக் முன்னர் தெரிவித்திருக்கிறது ஸ்விக்கி. இந்த ஆண்டு புத்தாண்டு நாளில் மட்டும் 3.5 லட்சம் பிரியாணி ஆர்டர்களும், 2.5 லட்சம் பீட்சா ஆர்டர்களும் டெலிவரி செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறது ஸ்விக்கி. ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களால் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பொருளை வெளியிடுவது ஸ்விக்கி நிறுவனத்தின் வழக்கம். கடந்த ஏழு ஆண்டுகளாக 2022-ம் ஆண்டு வரை ஸ்விக்கி வாடிக்கையாளர்களால் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பொருளாக பிரியாணியே இருந்து வருகிறது. ஒவ்வொரு நொடியிலும் 2.28 பிரியாணிக்கள் ஆர்டர் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கிறது ஸ்விக்கி நிறுவனம்.