மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து நடத்த உத்தரவு
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இதுவரை இப்போட்டியை தென்கால்பாசன விவசாயிகள் சங்கம் நடத்திய நிலையில், இப்போட்டியில் சாதி-மதம் உள்ளிட்ட மோதல்கள் ஏற்படுவதாக கூறப்பட்டது. எனவே, பலதரப்பினரும் இப்போட்டியை மாவட்ட நிர்வாகம் நடத்தவேண்டும் என்று கோரினர். இந்நிலையில் இதுகுறித்து மதுரையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவின் விசாரணை நீதிபதிகள் லட்சமி நாராயணன், எஸ்.எம்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் அமர்வுக்கு முன்னர் நடந்தது. அப்போது நீதிபதிகள்,'ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி, மதங்கள் புகுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற இன்னல்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்'என்று கூறினர். பின்னர், 'அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை இனி மதுரை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும்' என்று உத்தரவிட்டுள்ளனர்.