SCO மாநாடு: சீனாவின் BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்தது இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு ஆன்லைனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோரும் ஆன்லைன் மூலம் பங்கேற்றனர். இந்த உச்சிமாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட புது டெல்லி பிரகடனத்தில், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் மிக முக்கியமான திட்டமாக கருதும் பெல்ட் அண்ட் ரோட்ஸ் முன்முயற்சியை(BRI) ஆதரிக்கும் பத்தியில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. SCO அமைப்பு என்பது சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளின் கூட்டு அமைப்பாகும். இந்த நாடுகளில் இந்தியா மட்டுமே BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்திருக்கிறது.
BRI முன்முயற்சி என்றால் என்ன? இந்தியா அதை ஏன் எதிர்க்கிறது?
பெல்ட் அண்ட் ரோட்ஸ் முன்முயற்சி என்பது 2013ஆம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கால் முன்மொழியப்பட்டதாகும். கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவை ரோடுகள் மூலமாக இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டமே இந்த BRI திட்டமாகும். இந்த திட்டம், தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, மத்திய ஆசியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவுடன் சீனாவை தரைவழியாக(ரோடுகள் மூலம்) இணைக்கிறது. இது தவிர, இந்த திட்டத்தில் கடல் வழி பாதைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இப்படி இணைக்கப்படும் ரோடுகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர்(POK) வழியாகாவும் செல்கிறது. இதற்கு பாகிஸ்தான் ஒப்புதல் தெரிவித்திருந்தாலும், இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை நேரடியாக மீறுகிறது என்று இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கிறது. இதற்காகவே, இந்தியா BRI திட்டத்தை ஆதரிக்க மறுக்கிறது.