LOADING...
அண்ணா பல்கலை. இன்ஜினியரிங் பாடத்திட்டம் மேம்பாடு: புதிய பாடங்கள், வெளிநாட்டு மொழிகள் கட்டாயம்
2025-26 கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

அண்ணா பல்கலை. இன்ஜினியரிங் பாடத்திட்டம் மேம்பாடு: புதிய பாடங்கள், வெளிநாட்டு மொழிகள் கட்டாயம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 28, 2025
08:48 am

செய்தி முன்னோட்டம்

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். அதன்படி, 2025-26 கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய பாடத்திட்டத்தில், மாணவர்கள் கட்டாயமாக ஜப்பான், ஜெர்மனி அல்லது கொரியா ஆகிய மூன்று வெளிநாட்டு மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து கற்க வேண்டும். இதன் மூலம், உலகளாவிய வேலை வாய்ப்புகளில் மாணவர்களின் தகுதி மற்றும் வாய்ப்பு அதிகரிக்குமென பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த பாடத்திட்ட மேம்பாட்டு நடவடிக்கைக்காக, கல்வியாளர்கள், தொழில் நிபுணர்கள், விஞ்ஞானிகள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் இந்த முன்மொழிவு ஏற்கப்பட்டு, நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு முதல் முறையாக, உடற்கல்வி பாடங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

புதிய பாடங்கள்

நடப்பாண்டு முதல் புதிய பாடங்கள் அறிமுகம்

புதிய பாடத்திட்டங்களில் 'புராஜெக்ட் டெவலப்மென்ட்' எனப்படும் திட்ட மேம்பாட்டுக்குப் பெருமளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பான மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு, பட்டதுடன் கூடுதலாக சிறப்பு பட்டம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இரண்டு செமஸ்டர்களில் தொழில் துறை சார்ந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 'ரீ-இன்ஜினியரிங் ஆஃப் இனோவேஷன்' என்ற பாடம் தொழில்துறை வல்லுநர்களால் கற்பிக்கப்படும். தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், திறன் மேம்பாட்டு பாடங்களும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதேசமயம், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் தீவிரமாக நடைபெற உள்ளன. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML), தரவு அறிவியல் (Data Science) உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்பங்களுடன், காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை தொடர்பான பாடங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.