
கடத்தல் டு சஸ்பெண்ட்: காதல் திருமண விவகாரத்தில் ADGP சஸ்பெண்ட் செய்யப்பட்டது எதற்காக?
செய்தி முன்னோட்டம்
காதல் திருமண விவகாரத்தில் சிறுவனை கடத்த உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆயுதப்படை கூடுதல் டிஜிபி எச்.எம்.ஜெயராம் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட கைது உத்தரவுக்கு எதிராக தற்போது ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை (ஜூன் 18) விசாரிக்க பட்டியலிட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை என்ன நடந்தது? ADGP சஸ்பெண்ட் செய்யப்படும் அளவிற்கு இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
பின்னணி
இடைநீக்கம் செய்யப்படும் அளவிற்கு சென்ற வழக்கின் பின்னணி
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் (23) மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜஸ்ரீ (21) ஆகியோர் காதலித்து கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
இதை எதிர்த்த விஜஸ்ரீயின் தந்தை வனராஜா, தனது மகளை மீட்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
ஜூன் 6-ஆம் தேதி, வனராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் தனுஷின் இல்லத்துக்கு சென்றுள்ளனர். அங்கே அவர் இல்லாத காரணத்தால், அவரது 17 வயது தம்பியை கடத்தி சென்றதாக புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கடத்தலில், ADGP ஜெயராமின் காவல் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையின் போது உயர் நீதிமன்ற வளாகத்திலேயே ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
கண்டனம்
நீதிமன்றத்தின் கடும் கண்டனம்
இந்த வழக்கில், சட்டத்தை மதிக்காமல் ஆள்கடத்தலில் ஈடுபட்டதாக கே.வி.குப்பம் MLA பூவை ஜெகன்மூர்த்தியார் மீதும் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
வழக்கில் இருவரும் தலைமறைவாக சென்றதும் நீதிமன்றம் இருவரையும் உடனடியாக ஆஜராக உத்தரவிட்டது.
இதையடுத்து ADGP ஆஜர் ஆக, அவர் ஆஜரான சிறிது நேரத்திலேயே நீதிபதி உத்தரவின்பேரில் கோர்ட் வளாகத்திலேயே சீருடையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையே டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் இடையே அவசர ஆலோசனை நடைபெற்றது.
அதன் பிறகு, ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னணி
ஜெயராமின் பின்னணி
கர்நாடகாவை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்த ஹெச்.எம்.ஜெயராம், 1996ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி.
தமிழ்நாட்டில் நாமக்கல், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றியவர். அவரது பணிக்காலம், வரும் மே மாதத்துடன் நிறைவு பெறவுள்ளது.
இந்த நிலையில்தான் ஆள் கடத்தல் வழக்கில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை நாளை விசாரிக்க உள்ளதைத் தொடர்ந்து, சட்டப்பூர்வ நிலை என்னவாகும் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனிடையே இந்த வழக்கில் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி திருவாலாங்காடு போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி இருக்கிறார்.