11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு
ஏழு சுற்று மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக்-ரஜோரி தொகுதிக்கான தேர்தல் மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோரும் வாக்களித்தனர். இன்றைய வாக்குப்பதிவுடன் 543 நாடாளுமன்றத் தொகுதிகளுள் பாதிக்கும் மேற்பட்டவற்றில் வாக்குப்பதிவு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, நாடு ஏற்கனவே ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டது என்று அர்த்தம் கொள்ளலாம்.
பாஜக கோட்டையாக விளங்கும் பகுதிகளில் 3ம் கட்ட தேர்தல் நடக்கிறது
காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தவுடன், மற்ற போட்டியாளர்கள் தேர்தலில் இருந்து விலகியதால், சூரத் தொகுதியில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றது. பாஜக கோட்டையாக விளங்கும் பகுதிகளில் 3ம் கட்ட தேர்தல் நடக்கிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 92 இடங்களுள் 72 இடங்களில் பாஜக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வென்றது. அவற்றில் 26 தொகுதிகள் குஜராத்தில் மட்டும் உள்ளன. பாஜக மிகவும் சிறப்பாக செயல்பட்ட இன்னொரு மாநிலமான கர்நாடகாவில், அக்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மாபெரும் பாலியல் ஊழல் குற்றசாட்டுகளை எதிர்கொண்டு வருவதால், பாஜகவுக்கு கர்நாடகா குதிரைக்கொம்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஊழலில் இருந்து விலகி இருக்க பாஜக முயற்சித்து வருகிறது.