ஆவடி அருகே புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
சென்னையை அடுத்த ஆவடி அருகே அண்ணலூர் பணிமனையில் இருந்து ஆவடிக்கு வந்த மின்சார ரயில் திடீரென தடம் புரண்டதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்ட போதிலும், இந்த விபத்தின் போது பயணிகள் யாரும் ரயிலில் இல்லை என்பதால், பெரும் இழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய ரயிகளின் போக்குவரத்து பெரிதாக பாதிக்கப்பட்டன. சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில் போக்குவரத்தும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் ஓட்டுனரின் கவனக்குறைவு தான் விபத்துக்கு காரணம் என்று தகவல்
இந்த விபத்து நடந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே உயர் அதிகாரிகள், ரயில் போக்குவரத்தை சீர் செய்ய முயற்சித்து வருகின்றனர். முக்கியமான இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளள்ளதால், வந்தே பாரத் உள்ளிட்ட முக்கிய ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட தகவலின் படி, ரயில் ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாகவே இந்த ரயில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. மேலும், உயர்மட்ட அதிகாரிகளும் காவல்துறையினரும் இந்த விபத்து எதனால் நடந்தது என்பதை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.