திரிஷா குறித்து சர்ச்சை கருத்து: மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க நடிகர் சங்கம் வலியுறுத்தல்
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து பேசிய சர்ச்சை கருத்துக்கள் வைரலான நிலையில், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்சூர் அலிகான் பேசிய காட்சிகளைப் பார்த்து தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும், பெண்கள் சினிமாவிற்குள் நுழைவதும், சாதிப்பதும் சவாலாக இருக்கும் சூழ்நிலையில், இது போன்ற கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என்றும், இச்சம்பவத்தில் நடிகர் சங்கம் பாதிக்கப்பட்ட நடிகைகளின் பக்கம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை, அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது எனவும் அந்த அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.
என்ன பேசினார் மன்சூர் அலிகான்?
நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் நடிகை திரிஷா, சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் குறித்து சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய மன்சூர் அலிகான், "திரிஷாவை பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை" என்ற சர்ச்சை கருத்தை தெரிவித்தார். மேலும், சில முன்னாள் நடிகைகளுடன் இவர் நடித்திருந்த காட்சிகளையும் மேற்கோள் காட்டி இவ்வாறு தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் திரிஷா, மன்சூர் அலிகான் பேச்சில், பாலியல் ரீதியான, அவமரியாதை, பெண் வெறுப்பு, மோசமான ரசனையைக் காண்பதாகவும், அவரது பேச்சுக்கு கடுமையான கண்டனங்களையும் தெரிவித்து இருந்தார்.