இந்திய திரையரங்குகளில் முதன்முறையாக ராமாயணம் அனிமேஷன் திரைப்படம்; தமிழிலும் வெளியாகிறது
1993-ஆம் ஆண்டில் ஜப்பானிய-இந்திய கூட்டுறவாக தயாரிக்கப்பட்ட "ராமாயணா: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா" அனிமேஷன் திரைப்படம் இந்தியாவில் வரும் அக்டோபர் 18-ஆம் தேதி வெளியாகிறது. இயக்குநர்கள் யுகோ சகோ, ராம் மோகன் மற்றும் கொயிச்சி சசகி ஆகியோர் இணைந்து இயக்கிய இப்படம், இந்திய திரையரங்குகளில் முதன்முறையாக வெளிவருகிறது. தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் 4K ஃபார்மெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அனிமேஷன் ராமாயணம் 2000-ஆம் ஆண்டில் இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. மேலும், 'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' போன்ற மிகச்சிறந்த வெற்றித் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இந்த அனிமேஷன் ராமாயணம் திரைப்படத்திற்கும் பங்களித்துள்ளார்.
Twitter Post
காலத்தை வென்ற திரைப்படம் என தயாரிப்பு தரப்பு நம்பிக்கை
இந்திய திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடும் விநியோக உரிமையை கீக் பிக்சர்ஸ் இந்தியா, ஏஏ பில்ம்ஸ் மற்றும் எக்சல் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பெற்றுள்ளன. கீக் பிக்சர்ஸ் இந்தியாவின் துணை நிறுவனர் அர்ஜுன் அகர்வால் கூறியதாவது, "ராமாயணம்" என்ற அனிமேஷன் திரைப்படம் இந்தியா-ஜப்பான் உறவை பலப்படுத்தும் புதிய முயற்சியாகும். காலத்தைவென்ற இந்த கதையைப் பற்றிய புதுமையான, துடிப்பான திரைப்படம் அனைத்து வயதினரையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை என அவர் தெரிவித்தார்.