படப்பிடிப்பிற்காக தூத்துக்குடி விரைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - வைரல் வீடியோ
'ஜெய் பீம்' திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #தலைவர்170 திரைப்படத்திற்கு, 'வேட்டையன்' என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில், ரஜினிகாந்த் மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் நடித்துள்ளார். இது தவிர, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா, பஹத் பாசில் என பெரிய நடிகர் பட்டாளமே படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் நிலையில், படம் மும்பை, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
ரஜினியை கண்ட ரசிகர்கள் 'தலைவா' என ஆனந்த கூச்சலிட்டனர்
அதே போல் இப்படம் வரும் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று(டிச.,26) காலை தூத்துக்குடி விமான நிலையம் சென்றடைந்துள்ளார். விமான நிலையத்தின் வெளிப்புறம் இவரது ரசிகர்கள் இவரை காண ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கைக்கூப்பியபடி வெளியில் நடந்து வந்தார். அவரை கண்டதும் ரசிகர்கள் 'தலைவா' என ஆனந்த கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து, அவர் அங்கிருந்து காரில் கன்னியாகுமரி சென்றார் என்று கூறப்படுகிறது. ரஜினி விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.