தன்னுடைய விவாகரத்து குறித்து அவதூறு கிளப்பிய காங்கிரஸ் அமைச்சரை கண்டித்த சமந்தா
காங்கிரஸ் தலைவரும், தெலுங்கானா அமைச்சருமான கொண்டா சுரேகாவின் கருத்துக்கு நடிகை சமந்தா கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததில் பிஆர்எஸ் செயல் தலைவர் கேடி ராமாராவ் அல்லது கேடிஆர் பங்கு வகித்ததாக சுரேகா நேற்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும் பல அவதூறு கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார். இது பலரை முகம் சுளிக்க வைத்தது. இதற்கு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தனது பதிலை சமந்தா தெரிவித்துள்ளார். அதில், விவாகரத்து என்பது அவரின் தனிப்பட்ட விஷயம் எனக்கூறிய அவர், தான் எப்போதும் அரசியலில் ஈடுபடாமல் இருக்க முயற்சிப்பதாகவும், அரசியல் சண்டைகளில் இருந்து தன் பெயரைத் தவிர்க்க முடியுமா என்று கூறியுள்ளார்.
Twitter Post
அமைச்சர் சுரேகா கூறியது என்ன?
தெலுங்கானா வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கொண்டா சுரேகா புதன்கிழமை பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவுக்கு எதிராக விமர்சனங்களை வீசினார். அப்போது, சமந்தா- நாக சைதன்யாவின் விவாகரத்திற்கு அவரே காரணம் என தெரிவித்தார். "போதைக்கு அடிமையான கே.டி.ஆர்., சினிமா பிரபலங்களுக்கு ரேவ் பார்ட்டி நடத்தி வந்தார். இவருடைய அட்டூழியங்களை எதிர்கொள்ள முடியாமல், பல ஹீரோயின்கள், சினிமா வாழ்க்கையை துண்டித்து, திருமணம் செய்து, செட்டில் ஆகிவிட்டனர்" எனவும் தெரிவித்தார்.
சமந்தா விவாகரத்து பற்றி பேசிய காங்கிரஸ் அமைச்சர் சுரேகா
தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மாநாட்டு மையத்தை இடிக்காமல் இருக்கவேண்டும் என்றால், அவரது மருமகள் சமந்தாவை தன்னிடம் அனுப்புமாறு KTR தெரிவித்ததாகவும், அதனால், நாகார்ஜுனா சமந்தாவை கேடிஆரிடம் போகச் சொல்லி வற்புறுத்தியதாகவும் சுரேகா பகீர் குற்றசாட்டை வைத்தார். மாமனார் நாகர்ஜூனாவின் வற்புறுத்தலை சமந்தா ஏற்க மறுத்ததனால், அது விவாகரத்துக்கு வழிவகுத்தது என தெரிவித்தார் சுரேகா. மேலும், "சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கேடிஆர் தான் காரணம். இவரால் பல ஹீரோயின்கள் சீக்கிரமே திருமணம் செய்து கொண்டனர். போதைக்கு அடிமையாகி ரேவ் பார்ட்டிகளுக்குச் சென்றார். பிளாக்மெயில் செய்து பலரை தொந்தரவு செய்தார்." என்றார்.
அமைச்சரின் கருத்திற்கு நாகார்ஜூனா, அமலா, நாகசைதன்யா கண்டனம்
அமைச்சரின் கருத்துக்கு நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "மாண்புமிகு அமைச்சர் திருமதி கொண்டா சுரேகாவின் கருத்துகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை உங்கள் எதிரிகளை விமர்சிக்க பயன்படுத்தாதீர்கள். தயவுசெய்து மற்றவர்களின் அந்தரங்கத்தை (sic) மதிக்கவும்" என்று தெலுங்கில் அவர் Xஇல் எழுதினார். "பொறுப்பான பதவியில் உள்ள ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை மற்றும் தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார். மேலும் அமலா, நாகசைதன்யா மற்றும் பலர் அமைச்சரின் இந்த கூற்றை வன்மையாக கண்டித்துள்ளனர்.