நடிகர் மேத்யூ பெர்ரி கெட்டமைன் ஓவர் டோஸ்ஸால் உயிரிழந்தார்- பிரேத பரிசோதனை அறிக்கை
புகழ்பெற்ற அமெரிக்க சிட்காம் சீரிஸான 'பிரண்ட்ஸ்' நடிகர் மேத்யூ பெர்ரி, கெட்டமைன் ஓவர் டோஸ்ஸால் உயிரிழந்ததாக, லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மருத்துவ பரிசோதகரால் நேற்று வெளியிடப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. பெர்ரி,54, கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, தன் வீட்டில் குளியல் அறையில் மூழ்கியபடி இறந்து கிடந்தார். காவல்துறையின் முதற்கட்ட தகவல்கள், இவரது உயிரிழப்பு விபத்து என்றும், இறப்பிற்கான வேறு காரணங்கள் குறித்து சந்தேகிக்கவில்லை எனக் கூறியிருந்தது. அவரது மரணத்திற்கான காரணம் "கெட்டமைனின் கடுமையான விளைவுகள்" என பிரேதப்பரிசோதனை பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் மரணத்திற்கு பங்களிக்கும் காரணிகளாக "மூழ்குதல், இதய தமனி நோய் மற்றும் புப்ரெனோர்பின் விளைவுகள்" என பட்டியலிடப்பட்டுள்ளன. (புப்ரெனோர்பின் என்பது ஓபியாய்டு பயன்பாட்டுக் கோளாறுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து.)
கெட்டமைன் எதற்கு பயன்படுத்தப்படுகிறது?
கெட்டமைன் மருந்து, மயக்க மருந்தைத் தூண்டுவதற்கு பயன்படுத்தப்படும் மருந்தாகும். இது மனச்சோர்வு மற்றும் வலி நிவாரணையாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேத்யூ பெர்ரி மனச்சோர்வுக்காக இந்த மருந்தை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன், அவர் இந்த மருந்தை உட்கொள்ளவில்லை. மேத்யூ பெர்ரி தான் உயிரிழக்கும் நாளன்று காலையில் 11 மணி அளவில், பிக்கில் பால் விளையாட சென்று இரண்டு மணி நேரத்திற்கு பின் வீடு திரும்பியதாக கண்ணால் பார்த்த சாட்சியங்கள் கூறுகின்றன. அதற்கு சற்று நேரத்திற்கு பின், அவரது உதவியாளர் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன், பெர்ரியை கடைசியாக உயிருடன் பார்த்தார். மாலை 4.17 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக போலீசார் அறிவித்ததாக, அந்த பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.