எதிர்நீச்சலில் ஆதிகுணசேகரனாக நடிக்கும் வேலராமமூர்த்தி குறித்த சில தகவல்கள்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து கடந்த மாதம் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் ஆதிகுணசேகரனாக யார் நடிக்கப் போகிறார்கள் என ரசிகர்கள் மத்தியில் விவாதம் எழுந்தது. தற்போது ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் எழுத்தாளரும், நடிகருமான வேலராமமூர்த்தி நடிக்கிறார். இவரின் அறிமுக காட்சிகள் நேற்று ஒளிபரப்பானது. முன்னாள் ராணுவ வீரர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் வேலராமமூர்த்தி. வெளிப்படையான பேச்சு, ஆஜானுபாகுவான தோற்றம், முறுக்கு மீசையுடன் வலம் வரும் வேலராமமூர்த்தி குறித்த சில தகவல்களின் தொகுப்பு.
ராணுவ வீரராக 5 வருடம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெருநாழி என்னும் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வேலராமமூர்த்தி. பியூசி வரை மட்டுமே படித்த இவர் தனது பதினாறரை வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றிய பின் ஊர் திரும்பி அஞ்சலகத்தில் பணியில் சேர்ந்தார். திரைத்துறைக்கு வருவதற்கு முன் தமிழ்நாடு அரசின் அறிவொளி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
குற்றபரம்பரை நாவலின் ஆசிரியர் இவர்தான்!
வேலராமமூர்த்தி இலக்கிய அரங்கில், தன் மண் சார்ந்த எழுத்துகளுக்காக அறியப்பட்டவர். 'குருதி ஆட்டம்', `பட்டத்து யானை' முதலிய சில நாவல்களை எழுதியுள்ளார். இவரின் `கோட்டைக் கிணறு', `இருளப்பசாமியும் 21 கிடாயும்' உள்ளிட்ட நாவல்கள் மக்கள் மத்தியில் கவனம் பெற்றன. இயக்குனர் பாரதிராஜா, பாலா, பாண்டிராஜ் ஆகியோர் சினிமாவாக்க முயன்று முடியாமல் போன, குற்றபரம்பரை நாவலை எழுதியதும் வேலராமமூர்த்தி தான். தற்போது குற்றப்பரம்பரை நாவல் சசிக்குமார் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஆக வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதயானை கூட்டம் திரைப்படம் மூலம் சினிமா என்ட்ரி
கடந்த 2013 ஆம் ஆண்டு, விக்ரம் சுகுமாரன் இயக்கிய 'மதயானை கூட்டம்' திரைப்படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் வேலராமமூர்த்தி. அதன் பின் கொம்பன், பாயும் புலி, ரஜினி முருகன், சேதுபதி என தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'கிடாரி' திரைப்படத்திற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான விகடன் விருதை பெற்றிருந்தார். மேலும் பேட்டைக்காளி, செங்காளம் என இரண்டு வெப் சீரிஸிகளிலும் நடித்துள்ளார். வேலராமமூர்த்தி, அவர் ஏற்றுக்கொள்ளும் எதிர்மறை பாத்திரங்களுக்காகவே ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர்.
'இளந்தாரிப்பய' டு 'இந்தா மா ஏய்'
வேலராமமூர்த்தி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'பிரான்மலை' திரைப்படத்தில் அவர் பேசிய 'இளந்தாரிப்பய' வசனம் சமீபத்தில் வைரலானது. அதேபோல் எதிர்நீச்சல் தொடரில் மாரிமுத்து பேசி வந்த `ஏய் இந்தாம்மா! 'ஏம்மா ஏய்!' போன்ற வசனங்களும் வைரலானது. இந்நிலையில் மாரிமுத்து சாயலில் உள்ள வேலராமமூர்த்தியிடமும் எதிர்நீச்சல் தொடரில் இது போன்ற பல சூப்பர் ஹிட் வசனங்களை எதிர்பார்க்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை.