'லியோ' திரைப்படம் நாளை ரிலீஸ் - பத்திரிகையாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ்
நடிகர் விஜய் நடித்து நாளை(அக்.,19)ரிலீஸாகவுள்ள 'லியோ' படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இன்று(அக்.,18)செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் 'லியோ' படம் எதிர்கொள்ளும் சர்ச்சைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "விஜய் படம் என்றாலே எதாவது ஓர் பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கும். ட்ரைலரில் இடம்பெற்றிருந்த கெட்ட வார்த்தையால் சர்ச்சை கிளம்பியது. இதனால் தற்போது அந்த வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. அந்த வார்த்தை இடம்பெறவில்லை எனிலும், வேறு ஏதாவதொரு பிரச்சனை வந்திருக்கும்" என்று பதிலளித்துள்ளார். 2வது முறையான கூட்டணி குறித்த கேள்விக்கு, 'மாஸ்டர்' படம் வெற்றிக்கு பின்னர் தான் 'லியோ' படத்தின் வாய்ப்பினை விஜய் தனக்கு அளித்ததாகவும், இப்படத்தினை தனது ஸ்டைலில் எடுக்க முழு சுதந்திரத்தினை விஜய் கொடுத்தார் என்றும் தெரிவித்தார்.
'கூடுதல் கட்டணம் செலுத்தி படம் பார்க்க வேண்டாம்' - இயக்குனர்
'லியோ' படத்தின் மூலம் தங்களுக்குள்ளான புரிதல் மேம்பட்டுள்ளது என்றும் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார். 'இப்படம் முழுக்க முழுக்க ஆக்க்ஷன் திரைப்படம். குடும்ப படம் என்று எண்ணி படத்திற்கு வருவோர் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது' என்றும் அவர் கூறினார். இதனிடையே இப்படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் இன்று காலை போட்ட பதிவில் 'LCU' என குறிப்பிட்டு கண்ணடிப்பது போன்ற இமோஜியையும் போட்டிருந்தார். இதுகுறித்து பேசிய இயக்குனர், "இப்படம் 'LCU'வில் உள்ளதா இல்லையா? என்பது நாளை தான் தெரியவரும்" என்று கூறியுள்ளார். இறுதியாக அவர், தனக்கே படத்தின் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறிய நிலையில், கூடுதல் கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுத்து படம் பார்க்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.