காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம்: வெளியான அறிவிப்பு
2022ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி கர்நாடகாவில் வெளியாகி, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலத்திலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற திரைப்படம் காந்தாரா. அத்திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பை முன்னிட்டு பின்னர், அக்டோபர் 14ம் தேதி இந்தியிலும், அக்டோபர் 15ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. வெறும் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், இந்தியா முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தியது. குறிப்பாக இந்தியில் 96 கோடி ரூபாய் வசூல் செய்தது காந்தாரா. காந்தாரா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே வரிசையில் மற்றொரு திரைப்படத்தை தயாரிக்கவிருப்பதாக அறிவித்தது அத்திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம்.
காந்தாரா 2 திரைப்படத் தகவல்கள்:
இந்நிலையில் காந்தாராவின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறது ஹோம்பாலே திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். அதன்படி, வரும் நவம்பர் 27ம் தேதியன்று நண்பகல் 12.25 மணிக்கு காந்தாரா இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்தத் திரைப்படத்திற்கு 'காந்தாரா தி லெஜண்டு: சாப்டர்-1' எனப் பெயரிடப்பட்டிருப்பதையும் ஹோம்பாலே நிறுவனத்தின் அறிவிப்புப் பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்ற திரைக்கதைக்கு முன்பு நடந்த சம்பங்களைக் கொண்டு, காந்தாராவின் இரண்டாம் பாகத்தை ஒரு ப்ரீக்வெல் படமாக கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் காந்தாராவின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி.