'பரவியது வதந்தி.. உண்மை இதுதான்!' சவுதியில் நடந்த தாக்குதலில் இந்தியர் பலி என வெளியான செய்தியில் திருப்பம்
செய்தி முன்னோட்டம்
சவுதி அரேபியாவின் அல்-கர்ஜ் பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியானதாக முன்னதாக வெளியான செய்தியை ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது. இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் இந்தியர் யாரும் உயிரிழக்கவில்லை என்பது மிகப்பெரிய நிம்மதியளிக்கும் விஷயம் என்று தூதரகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
சிகிச்சை
காயமடைந்த இந்தியருக்கு சிகிச்சை
நேற்று சவுதி சிவில் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட தகவலில் ஒரு இந்தியர் மற்றும் ஒரு வங்கதேசத்தினர் பலியானதாகக் கூறப்பட்டது. ஆனால், பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் உயிரிழந்த இருவருமே வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு இந்தியருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது அல்-கர்ஜ் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தியத் தூதரகத்தின் சமூக நலப் பிரிவு ஆலோசகர் ஒய்.சபீர் நேற்று இரவு நேரில் சென்று காயமடைந்த இந்தியரை சந்தித்து நலம் விசாரித்தார்.
போர்
சவுதி - ஈரான் இடையிலான போர் பதற்றம்
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தனது பதிலடியை வளைகுடா நாடுகள் மீது திருப்பிவிட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் இளவரசர் சுல்தான் விமானத் தளம் மற்றும் ஷைபா எண்ணெய் வயல்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானின் இந்த ஆதாரமற்ற தாக்குதல்கள் தொடர்ந்தால், அந்த நாடு மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும் எனச் சவுதி வெளியுறவு அமைச்சகம் கடுமையாக எச்சரித்துள்ளது.
வழிகாட்டுதல்
இந்தியர்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்
சவுதியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜித்தாவில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவை வழக்கம் போல் இயங்கி வருகின்றன. இந்தியக் குடிமக்கள் உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு விதிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ரியாத், ஜித்தார் மற்றும் தம்மாம் ஆகிய நகரங்களிலிருந்து இந்தியாவிற்கு வழக்கம் போல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தாயகம் திரும்ப விரும்புவோர் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.