பிக்பாஸ் இல்லத்தில், தனக்கு நடந்த காஸ்டிங் கவுச் கொடுமைகளை பற்றி பேசிய நடிகை விசித்ரா
'90களில் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை விசித்ரா. ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் படங்கள் பலவற்றிலும் அவர் நடித்துள்ளார். எனினும் சில காலத்திற்கு பிறகு அவர் நடிப்பு தொழிலில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டார். இந்நிலையில், கம்பேக் தரும் விதமாக, விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் தோன்றினார். அதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 -இல் ஒரு போட்டியாளராக களமிறங்கி உள்ளார். அந்த பிக் பாஸ் இல்லத்தில், தன்னுடைய தைரியமான நடவடிக்கையாலும், நேர்மறையான கருத்துக்களிலும் தற்போது ரசிகர்களை ஈர்த்து வரும் விசித்ரா, நேற்று நடந்த ஒரு டாஸ்க்கில், தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் அறிவித்த டாஸ்க்..வெளியான அதிர்ச்சி தகவல்
நேற்று பிக் பாஸ், போட்டியாளர்களை தங்கள் வாழ்க்கையையே புரட்டி போட்ட சம்பவம் ஏதேனும் ஒன்றை பகிர்ந்துகொள்ள சொன்னார். அதன்படி போட்டியாளர்கள் பலரும் தங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவங்கள், சோகமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். அப்போது விசித்ரா, தான் சினிமா துறையில் இருந்த போது, தான் எதிர்கொண்ட 'காஸ்டிங் கவுச்' சம்பவத்தை பற்றி கூறினார். பொதுவாக சினிமா துறையில், 'அட்ஜஸ்ட்மென்ட்' என்று கூறப்படும் 'காஸ்டிங் கவுச்' நிகழ்வுகள் பல கண்டும்காணாமல் போவதுண்டு. இது பற்றி பல நடிகைகள் பொதுவெளியில் பேசுவது இல்லை. ஆனால், விசித்ரா தைரியமாக இதை பற்றி பேசியது பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என தற்போது பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு தளத்தில் விசித்ராவிடம் அத்துமீறிய நபர்
விசித்ரா அந்த டாஸ்கின்போது, ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக தான் கேரளா சென்றதாகவும், அப்போது அதே ஹோட்டலில் தங்கியிருந்த அப்படத்தின் ஹீரோ, தன் பேரை கூட கேட்காமல், 'மாலை ரூமிற்கு வா' என அழைத்ததாகவும் கூறினார். அந்த அழைப்பை தான் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்ததால், தனக்கு பாடம் புகட்ட நினைத்த அந்த ஹீரோ, பலரையும் ஏவி விட்டதாகவும், அன்றிரவிலிருந்து தன் அறையின் கதவை யார் யாரோ தட்டியதாகவும் கூறினார். அடுத்த நாள், படப்பிடிப்பு தளத்தில், ஸ்டண்ட் சீன் எடுக்கும்போது, ஸ்டண்ட்மேன் ஒருவர், தன்னை தகாத முறையில் தொட்டதாகவும், இதுபற்றி அங்கிருந்த ஸ்டண்ட் மாஸ்டரிடம் முறையிட்டபோது, அவர் விசித்ராவின் முறையீட்டை காதுகொடுத்து கேட்காமல், விசித்ராவின் கன்னத்தில் அறைந்தததாகவும் கூறினார்.
துணை நிற்காத நடிகர் சங்கம்
இத்தனை சம்பவங்கள் நடைபெற்ற போது, சம்பவ இடத்திலிருந்த நடிகரோ, நடிகையோ யாருமே தனக்காக நிற்கவில்லை எனக்கூறினார். உடனே படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேறி, தமிழ் சினிமாவின் நடிகர் சங்கத்திடம் அழைத்து பேசியுள்ளார் விசித்ரா. அவர்களோ, படத்தில் நடித்தவரை போதும், சென்னைக்கு நேராக வந்து முறையிட கூறினார்களாம். உடனே, சென்னைக்கு விரைந்த விசித்ரா, தன்னுடைய புகாரை பதிவு செய்ய சென்றபோது, அப்போதைய நடிகர் சங்க தலைவர், "இதெல்லாம் இங்கே சாதாரணம். அதனால், நீ போய் அடுத்த வேலையை பாரு" எனக்கூறினாராம். அப்போதுதான் விசித்ரா உணர்ந்தாராம், அந்த தெலுங்கு நடிகரின் பின்புலம் என்னவென்று. அந்த நடிகரின் அரசியல் செல்வாக்கு காரணமாகவே தனக்கு உதவ, சங்கம் முன்வரவில்லை எனக்கூறியுள்ளார்
யார் அந்த மர்ம நடிகர்? நெட்டிஸின்கள் வெளியிட்ட கிளிப்பிங்
எனினும் சட்டரீதியாக போராட முடிவெடுத்த விசித்ரா, கேரளா நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அங்கும் அந்த நடிகரின் செல்வாக்கு காரணமாகவும், சட்டத்தில் இருந்த ஓட்டைகள் காரணமாகவும், வழக்கிற்கு நீதி கிடைத்தபாடில்லை. அதனால் வெறுத்துப்போன விசித்ரா, திரை உலகை விட்டு விலக முடிவெடுத்ததாக கூறினார். இந்த நிலையில், அவரை இந்த நிலைக்கு தள்ளிய நபர் யார் என்பதை நெட்டிஸின்கள் தற்போது ஆதாரத்துடன் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். அவர் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தான் என்றும், அந்த திரைப்படத்தின் பெயர் 'பாலேவாடிவி பாசு' என கூறி வருகின்றனர். அதோடு, விசித்ராவிற்காக தாங்கள் நிற்போம் எனவும் குரல் கொடுத்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.