அனுஷ்காவின் 50வது படமாக உருவாகிறது பாகமதி 2
உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படங்களுக்கு பின் நடிகை அனுஷ்கா, ஜி அசோக் இயக்கத்தில் 'பாகமதி' என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான படத்தில் ஜெயராம், உன்னி முகுந்தன், முரளி சர்மா, ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம், 2018 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில், வர்த்தக ரீதியாக படம் சுமாரான வெற்றியை பெற்றிருந்தது. தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், தனது 42வது பிறந்த நாளை அனுஷ்கா கொண்டாடினார். இதனை முன்னிட்டு இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. மேலும், பாகமதி 2 அனுஷ்காவிற்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.