நடிகர் விஜய் அரசியலில் இறங்கும் நேரமா? நாளை மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக பரபரப்பு தகவல்
செய்தி முன்னோட்டம்
சென்னை அருகே பனையூரில் உள்ள இல்லத்தில்,நாளை, நடிகர் விஜய் தனது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இக்கூட்டம் அரசியல் நகர்வின் அடுத்த கட்டமாக இருக்குமோ என்ற பேச்சுக்கள் தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது.
ஏனெனில், அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறிய விஜய், அண்மை காலமாக தனது மக்கள் இயக்கத்தினை சமூக நிகழ்வுகளில் அதிகளவு ஈடுபடுத்தி வருகிறார் என்பதே இதற்கு காரணம்.
சமீபத்தில் கூட, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் இருந்து 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை அழைத்து நடிகர் விஜய் ஊக்கத்தொகை கொடுத்து அவர்களை கவுரவித்தார்.
இதில் சுமார் 1,600 பேர் கலந்துக்கொண்டனர்.
விஜய்
சட்டமன்ற தேர்தலை குறிவைத்து செயல்படுகிறாரா நடிகர் விஜய்?
மேலும், 'ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது' என்ற அறிவுறுத்தலையும் மாணவர்களுக்கு வழங்கினார்.
அதேபோல், "ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று உங்கள் பெற்றோர்களிடமும் சொல்லுங்கள். நிச்சயம் மாற்றம் ஏற்படும்" என்றும் அவர் மேடையில் பேசியிருந்தார்.
இவரின் அந்த அறிவுறுத்தல் இணையத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் வரும் 2025ம் ஆண்டு முழுவதும் தனது கவனத்தினை மக்கள் இயக்கம் மற்றும் களப்பணிகளில் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, அடுத்தாண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் பொழுது எவ்வித தலையீடும் செய்ய விரும்பாத விஜய், அதற்கு அடுத்து 2026ம் ஆண்டு வரவுள்ள சட்டமன்ற தேர்தலினை மனதில் கொண்டு மாநாடுகள் போன்றவற்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.