
பிரமாண்ட வெற்றி பெற்ற மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாக நடிகர் உன்னி முகுந்தன் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தனது மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் திட்டமிடப்பட்டிருந்ததை, அசல் படத்தைச் சுற்றியுள்ள கடுமையான விமர்சனங்கள் காரணமாக ரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
முதல் படத்தின் வலுவான பாக்ஸ் ஆபிஸ் வசூல் இருந்தபோதிலும் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான அனீஷ் அசீனி இயக்கிய மார்கோ படத்தில் உன்னி முகுந்தன், சித்திக் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
ரவி பஸ்ரூர் இசையமைத்த இந்தப் படம் ரூ.30 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. மேலும், இது பாக்ஸ் ஆபிஸில் ரூ.110 கோடி வசூலித்தது.
இருப்பினும், அதன் ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகு, அதிகப்படியான வன்முறை மற்றும் பிற சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக படம் எதிர்மறையான விமர்சனங்களை ஈர்த்தது.
இரண்டாம் பாகம்
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை தயாரிக்க திட்டம்
ஆரம்பத்தில், படத்தின் வெற்றியைப் பயன்படுத்திக் கொள்ள தயாரிப்பாளர்கள் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
எனினும், அதன் பிறகு, இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழுவிடம் இருந்து வரவில்லை.
இந்நிலையில், சமீபத்திய சமூக ஊடக உரையாடலில், ஒரு ரசிகர் மார்கோ 2 படத்தின் அப்டேட் குறித்து நடிகர் உன்னி முகுந்தனிடம் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த உன்னி முகுந்தன், மார்கோ சீரீஸில் தொடர்ந்து படங்களை எடுக்கும் முடிவை கைவிட முடிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தினார்.
அதிகப்படியான நெகட்டிவ் விமர்சங்கள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.