இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தலைமை மாற்றத் திட்டம்: புதிய CEO ஆக நியமிக்கப்படும் ஆஷிஷ் குமார் தாஷ்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், தனது புதிய தலைமை செயல் அதிகாரி (CEO)நியமிக்கப்பட்டவராக ஆஷிஷ் குமார் தாஷ் என்பவரை நியமித்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய CEO சலில் பரேக்கின் பதவிக் காலம் நிறைவடைவதை தொடர்ந்து, ஆஷிஷ் குமார் தாஷ் வரும் ஏப்ரல் 1, 2027 முதல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்பார். அதுவரை அவர் CEO-Designate ஆகச் செயல்படுவார்.
முக்கிய அம்சங்கள்
தலைவர்கள் மாற்றத்தின் முக்கிய அம்சங்கள்
தற்போதைய CEO சலில் பரேக் தனது 9 ஆண்டுகால பதவிக் காலத்தை முடித்த பிறகு, மார்ச் 31, 2027 உடன் ஓய்வு பெறுகிறார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஆஷிஷ் குமார் தாஷ், தற்போது சேவைத் துறை, ஆற்றல், வளம் மற்றும் நிலைத்தன்மை ஆகிய பிரிவுகளின் உலகளாவிய தலைவராக பணியாற்றி வருகிறார்.
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) அல்லது பிற அமைப்புகளால் அவர் இயக்குநராகப் பொறுப்பேற்க எந்தவிதத் தடையும் இல்லை என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பங்குச் சலுகைகள்
ஊழியர்களுக்கான புதிய பங்குச் சலுகைகள்
தலைமை நிர்வாகி நியமனத்துடன் சேர்த்து, ஊழியர்களுக்கான புதிய பங்கு ஒதுக்கீடுகளையும் இயக்குநர்கள் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
2015 ஊக்கத்தொகை இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள புதிய ஊழியர்களுக்கு 9,836 தடைசெய்யப்பட்ட பங்கு அலகுகள் (RSUs) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இவை ஆகஸ்ட் 1, 2026 முதல் மூன்று ஆண்டுகளுக்குச் சமமாகப் பிரித்து வழங்கப்படும்.
ஊழியர்கள் தங்களது பங்கு விருப்பங்களைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ.5 முகமதிப்பு கொண்ட 4,77,767 புதிய பங்குகளை ஒதுக்கியுள்ளது.
இந்த புதிய பங்குகள் ஒதுக்கீட்டிற்குப் பிறகு, நிறுவனத்தின் மொத்த சந்தா செலுத்தப்பட்ட மூலதனம் ₹2,029 கோடியாகவும், மொத்த பங்குகளின் எண்ணிக்கை 405.8 கோடியாகவும்உயர்ந்துள்ளது.