மீண்டும் RX பெயரில் புதிய பைக்கை உருவாக்கத் திட்டமிடும் யமஹா
உலகளவில் பைக் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் பைக்காக இருந்தது யமஹாவின் RX100 மாடல் பைக். ஆனால், தொழில்நுட்ப வளர வளர டூ ஸ்ட்ரோக் இன்ஜின்கள் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டு, அதன் இடத்தை ஃபோர் ஸ்ட்ரோக் இன்ஜின்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. இந்த மாற்றத்தால், யமஹாவின் RX100 மாடலும் விற்பனையில் இருந்தும் தயாரிப்பில் இருந்து காணாமல் போனது. ஆனால், இன்றும், முன்பு தயாரிக்கப்பட்ட RX100 பைக்குகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில், பழைய RX100 பைக்கைப் போலவே சிறப்பம்சங்களைக் புதிய பைக் ஒன்றைத் தயாரித்து, அதனை RX பெயரின் கீழேயே வெளியிடத் திட்டமிட்டு வருகிறது யமஹா நிறுவனம்.
யமஹாவின் புதிய RX:
உலகளவில் RX100 பைக்குக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும், இந்தியாவில் அந்த மாடலுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து தான் மிகவும் ஆச்சரியப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார் யமஹா இந்தியாவின் தலைவர் ஈஷின் சிகானா. குறைவான எடை, ஸ்டைல், பவர் மற்றும் மிக முக்கியமாக அதன் பைக்கை இயங்கும் போது அது வெளிப்படுத்தும் ஒலி ஆகியவையே RX100-ஐ பிற பைக்குகளில் இருந்து தனித்துக் காட்டியது. மேற்கூறிய அம்சங்களை கொண்ட புதிய பைக்கை உருவாக்க முயற்சி செய்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார் யமஹா இந்தியாவின் தலைவர். ஆனால், பழைய 100 சிசி டூ ஸ்ட்ரோக் பைக்காக இல்லாமல், 200 சிசி-க்கும் மேலான ஃபோர் ஸ்ட்ரோக் இன்ஜினைக் கொண்ட பைக்காகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.