டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்டு ரோவரின் புதிய எலெக்ட்ரிக் வாகனத் திட்டம்
அடுத்த ஏழு ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பிற்கான புதிய இலக்குகளை நிர்ணயித்திருக்கிறது டாடா மோட்டார்ஸ் மற்றும் அதன் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்டு ரோவர். இந்தப் புதிய திட்டம் குறித்து அந்நிறுவனத்தின் 58வது வருடாந்திர பொதுக்குழுவில் பகிர்ந்திருக்கிறார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன். 2030-ம் ஆண்டிற்குள் டாடா நிறுவனம் தயாரிக்கும் கார்களில் 50% எலெக்ட்ரிக் அல்லது பசுமை எரிபொருள் கொண்ட வாகனங்களாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது அந்நிறுவனம். அதேபோல், ஜாகுவார் லேண்டுரோவர் நிறுவனம் தயாரிக்கும் கார்களில் 65% பசுமைத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
டாடா மற்றும் ஜாகுவார் லேண்டு ரோவரின் புதிய எலெக்ட்ரிக் மாடல்கள்:
இரு நிறுவனங்களில் இருந்தும் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. டாடா நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்து வரும் நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை விரைவில் வெளியிடவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது எரிபொருள் மாடல்களாக விற்பனை செய்யப்பட்டு வரும் ஹேரியர் மற்றும் பன்ச் ஆகிய மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை வெளியிடவும் திட்டமிட்டிரு வருகிறது டாடா. அதேபோல், லேண்டு ரோவரின் எலெக்ட்ரிக் ரேஞ்சு ரோவர் மற்றும் ரேஞ்சு ரோவர் ஸ்போர்ட் உட்பட, ஜாகுவாரின் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் மாடலைகளையும் தங்களது பைப்லைனில் ஜாகுவார் லேண்டு ரோவர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.