2 மில்லியன் கார்களுக்கு மேல் விற்பனை செய்து மாருதி சுஸுகி நிறுவனம் சாதனை
இந்தியாவின் வாகனத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான மாருதி சுஸுகி, 2024 நிதியாண்டில் இரண்டு மில்லியன் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இப்படிபட்ட சாதனையை செய்து வரும் மாருதி சுஸுகி நிறுவனம், இந்தியாவின் சிறந்த பயணிகள் வாகன ஏற்றுமதியாளர் என்ற தனது பெயரை நிலைநாட்டியுள்ளது. 2024ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் மொத்த வருவாயை ரூ.36,697.5 கோடியாக மாருதி சுஸுகி நிறுவனம் பதிவுசெய்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மாருதி சுஸுகி ஈட்டிய ரூ.30,821.8 கோடி என்ற வருவாயை விட தற்போது அதன் வருவாய் அதிகரித்துள்ளது.
நிகர லாபம் 47.8% அதிகரித்துள்ளது
மாருதி சுஸுகியின் நிகர லாபம் 47.8% அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ2,623.6 கோடி ஈட்டிய மாருதி சுஸுகி, தற்போது ரூ.3,877.8 கோடி லாபமாக ஈட்டியுள்ளது. அதனால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒவ்வொரு பங்குக்கும் ரூ.125 ஈவுத்தொகை முன்மொழியப்பட்டுள்ளது. இதுவரை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கிய ஈவுத்தொகைகளிலேயே இது தான் அதிகபட்ச ஈவுத்தொகை என்பது குறிப்பிடத்தக்கது. 2023ஆம் நிதியாண்டில் ஒரு பங்கின் ஈவுத்தொகை ரூ90ஆக இருந்தது. அதில் இருந்து தற்போது ரூ.125ஆக ஈவுத்தொகை அதிகரித்துள்ளது. 2023-24 நிதியாண்டில், மாருதி சுஸுகி நிறுவனம், ஆண்டு விற்பனை அளவு, நிகர விற்பனை, ஏற்றுமதி மற்றும் நிகர லாபம் ஆகியவற்றில் புதிய சாதனைகளை படைத்துள்ளது.