இந்திய மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி: அமெரிக்காவில் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்கு $1,00,000 புதிய கட்டணம்?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயின்று பட்டம் பெற்ற பிறகு, அங்கு தங்கி வேலை செய்ய விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. சர்வதேச மாணவர்களின் கனவுத் திட்டமான ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெய்னிங் (OPT) முறையில் பணியாற்ற $1,00,000 (இந்திய மதிப்பில் சுமார் ₹85 லட்சத்திற்கும் மேல்) கட்டணம் விதிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
திட்டம்
$1,00,000 கட்டண திட்டம் முன்மொழிவு
F-1 விசாவில் அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு தங்கள் துறை சார்ந்த பணிகளில் அனுபவம் பெற OPT திட்டம் வழிவகை செய்கிறது.
வழக்கமாக பொது பிரிவினருக்கு ஓராண்டும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (STEM) சார்ந்த பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையிலும் இதில் அனுமதி வழங்கப்படுகிறது.
தற்போது இந்த அனுமதியை பெறுவதற்கு $1,00,000 கட்டணம் விதிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) பரிசீலித்து வருகிறது.
இக்கட்டணத்தை மாணவர்களே செலுத்த வேண்டுமா அல்லது அவர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டுமா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
புதிய மாற்றம்
தங்குவதற்கான கால வரம்பில் புதிய மாற்றம்
இதுமட்டுமின்றி, சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கான விதிகளிலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதுவரை அமலில் இருந்த 'டியூரேஷன் ஆஃப் ஸ்டேட்டஸ்' நடைமுறை ரத்து செய்யப்பட்டு, அதிகபட்சமாக 4 ஆண்டுகள் மட்டுமே தங்குவதற்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு மேல் கல்வித் திட்டம் நீடித்தால், மாணவர்கள் உள்நாட்டு பாதுகாப்புத் துறையிடம் (DHS) விசா கால நீட்டிப்பிற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தாக்கம்
இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கம்
தற்போது 3.3 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பயின்று வருகின்றனர்.
படிப்பை முடித்த பின் வேலைவாய்ப்பு பெறுவதையும், போட்ட முதலீட்டை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ள மாணவர்களுக்கு இக்கட்டண உயர்வு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.
நிறுவனங்கள் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த வேண்டி வந்தால், அவர்கள் அமெரிக்க குடிமக்களையே பணியமர்த்த முன்னுரிமை அளிப்பர்.
இதனால் அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் விருப்பம் சர்வதேச மாணவர்களிடையே குறையக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.