மத்திய கிழக்கிற்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா
ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) அமைப்பு, கூடுதல் பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு பட்டாலியன்களும் அனுப்பப்படுவதாக என பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார். மேலும் அவர், அந்தப் பகுதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் செயலாற்றும் வகையில் கூடுதல் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் அவர் எவ்வளவு படைகள் என்பதை குறிப்பிடவில்லை. THAAD அமைப்பு குறுகிய மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை, அவற்றின் இறுதி கட்டத்தில் சுட்டு வீழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கிற்கு தொடர்ந்து படைகளை அனுப்பிவரும் அமெரிக்கா
தற்போது மத்திய கிழக்கிற்கு படைகள் அனுப்பப்படுவதற்கு அப்பகுதியில் ஈரான் மற்றும் அதன் ஆதரவு படைகளின் சமீபத்தில் அதிகரித்துள்ள செயல்பாடுகள் காரணமாக சொல்லப்படுகிறது. அதே சமயம் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் போர் தொடங்கியது முதல் அமெரிக்கா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு படைகளை அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. போர் தொடங்கியவுடன் கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு விமானம் தாங்கி கப்பல், கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நகர்த்தி உள்ளது. இஸ்ரேலுக்கு கூடுதல் உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.