உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ரஷ்யா-அமெரிக்கா நாளை பேச்சுவார்த்தை; உக்ரைன் ரியாக்சன் என்ன?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க-ரஷ்ய உறவுகளை மீட்டெடுப்பதையும், உக்ரைன் போருக்கு தீர்வு காண்பதையும் நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்காக ரஷ்ய மற்றும் அமெரிக்க மூத்த அதிகாரிகள் செவ்வாய் கிழமை (பிப்ரவரி 18) சவுதி அரேபியாவின் ரியாத்தில் சந்திக்க உள்ளனர்.
இந்த விவாதங்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான சந்திப்புக்கு அடித்தளத்தை அமைக்கக்கூடும் என்று ரஷ்யா திங்களன்று உறுதிப்படுத்தியது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் புடினின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் ஆகியோர் இந்த கூட்டத்தில் ரஷ்யா சார்பாக பங்கேற்பார்கள்.
அதே நேரத்தில் அமெரிக்கா சார்பாக வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
உக்ரைன்
உக்ரைன் ரியாக்சன் என்ன?
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் சார்பாக இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்காததால், இதில் எந்த முடிவும் கிடைக்காது என்று கூறி பேச்சுவார்த்தைகளை நிராகரித்தார்.
இருப்பினும், விளாடிமிர் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தையில் சம்பந்தப்படுவார் என்று டிரம்ப் வலியுறுத்தினார்.
குறிப்பிடத்தக்க வகையில், புதன்கிழமை விளாடிமிர் ஜெலென்ஸ்கி சவுதி அரேபியாவுக்குச் செல்ல உள்ளார்.
ஆனால் அவரது பயணம் பேச்சுவார்த்தைகளுடன் தொடர்பில்லாதது என்பதை விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையே, உக்ரைனின் உயர் அதிகாரியான ஆண்ட்ரி யெர்மக், உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் சாத்தியமில்லை என்று மீண்டும் வலியுறுத்தினார்.
நியாயமான அமைதியை அடைவதற்கான உறுதியான திட்டம் உருவாக்கப்படும்வரை உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது என்று அவர் வலியுறுத்தினார்.