ஈரானுக்கு எதிரான ராணுவ தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா: பேச்சுவார்த்தைக்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு
செய்தி முன்னோட்டம்
ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட ராணுவ தாக்குதல் 'இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய மிகப்பெரிய தாக்குதலாக' இருந்திருக்கும் என்றும், அது அந்நாட்டிற்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், போரைத் தவிர்த்துத் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இத்தாக்குதல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தை திங்கள்கிழமை பிற்பகலில் தொடங்கும் என்றும், ஒப்பந்தத்தை எட்டுவதற்கு எந்தவொரு காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், மனித உயிர்களை பாதுகாக்கவும், வளைகுடா பிராந்தியத்தில் மேலும் சேதங்கள் ஏற்படுவதை தடுக்கவுமே தூதரக வழியை தேர்ந்தெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தியும் உலக பொருளாதாரமும்
உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் ஐந்திலொரு பங்கு கடந்து செல்லும் முக்கிய ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுப்படுத்தி வைத்திருப்பது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாதையை உடனடியாகவும் முழுமையாகவும் திறக்க ஈரான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவாக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த முடிவைத் தொடர்ந்து, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அதேவேளையில், ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு தொடர்பாக ஓமன் நாட்டுடன் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
தற்போதைய நிலை
இஸ்ரேலின் எச்சரிக்கையும் தற்போதைய நிலையும்
மறுபுறம், தூதரகப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் எதுவாக இருப்பினும், ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு எதிரான தங்கள் நடவடிக்கைகள் தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த தூதரக முயற்சியால் கச்சா எண்ணெய் விலையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சுமூக ஒப்பந்தம் எட்டுமா என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.