
தன்னுடைய கருத்துக்கு மாற்றாக உண்மையைச் சொன்னதால் ராணுவ உளவுத்துறை தலைவர் பதவியை பறித்த டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஷெத், பென்டகனின் பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பின் (DIA) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜெஃப்ரி க்ரூஸ் மற்றும் இரண்டு மூத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளார். துணை கடற்படைத் தலைவர் நான்சி லாகோர் மற்றும் கடற்படை சிறப்பு போர் கட்டளைத் தளபதி மில்டன் சாண்ட்ஸ் ஆகியோரும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் அடங்குவர். இந்த திடீர் பணி நீக்கத்திற்கு என்ன காரணம் என மூன்று அதிகாரிகளுக்கும் தெரியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் குறித்து பாதுகாப்பு உளவுத்துறை அளித்த அறிக்கைகள், அதிபர் டொனால்ட் டிரம்பின் கூற்றுகளுக்கு முரணாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
உளவுத்துறை அறிக்கை
டொனால்ட் டிரம்ப் கருத்துடன் முரண்பட்ட உளவுத்துறை அறிக்கை
கடந்த ஜூன் மாதத்தில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் குறைந்தபட்ச பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தியதாக அவர்களின் உளவுத்துறை அறிக்கை கூறியது. ஆனால், அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்த நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன என்று கூறியிருந்தார். இந்நிலையில், பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை, க்ரூஸ் பணி நீக்கம் செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளன. இருப்பினும், அதற்கான காரணத்தை அவர்கள் குறிப்பிடவில்லை. நம்பிக்கையின்மை என்ற காரணத்திற்காக இந்த பணி நீக்கம் நடந்துள்ளதாக சிஐஏவை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செனட்டர் மார்க் வார்னர் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை பணி நீக்கம் செய்வது, உளவுத்துறையை தேசத்தின் பாதுகாப்பு அமைப்பாக பார்க்காமல், விசுவாசத்திற்கான ஒரு சோதனையாகப் பார்ப்பதை காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.