ஈரானில் மீண்டும் அமெரிக்க விமானப்படை தாக்குதல்: மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர் மேகம்
செய்தி முன்னோட்டம்
மேற்கு ஆசியாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் தெரிவித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு, அமெரிக்க நேரப்படி இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5:30 மணி) ஈரான் மீதான தாக்குதல்கள் தொடங்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. "மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் முயற்சிக்கு அளிக்கப்பட்ட சக்திவாய்ந்த பதிலடியே இந்த வான்வழித் தாக்குதலாகும்" என்று Centcom தனது 'X' சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
தாக்குதல்
ஈரானில் பதிவான வெடிச்சம்பவங்கள்
அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஈரானின் தெற்குப் பகுதி முழுவதும் பலத்த வெடிச்சம்பவங்கள் பதிவானதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கெஷ்ம் தீவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஏவுகணை விழுந்து தாக்கியதாகத் தஸ்னிம் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
புஷெர், பந்தர் அப்பாஸ் உட்படத் தெற்கு ஈரானின் பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தைக் குறிவைத்து ஈரான் தனது நிலப்பரப்பில் இருந்து பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்த முயன்றது. அந்த ஏவுகணைகள் அனைத்தும் வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள ஈரானின் IRGC, ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தை இலக்கு வைத்ததாகக் கூறியுள்ளது.
எச்சரிக்கை
அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இப்போது எங்களின் முறை. நாங்கள் ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுப்போம்" என்று உறுதியளித்தார்.
இருப்பினும், தூதரக பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்புகளையும் அவர் மறுக்கவில்லை.
நிலைமையை ஆராய்ந்து பேச்சுவார்த்தைகள் தொடருமா என்பதை தீர்மானிப்போம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.