
உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிறைவேற்றம்
செய்தி முன்னோட்டம்
நியூயார்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, வியாழன் அன்று உலகின் முதல் முழுக் கண்ணையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
இது 'ஒரு மருத்துவ முன்னேற்றம்' என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நோயாளி உண்மையில் பார்வையை மீண்டும் பெறுவாரா என்பது இன்னும் தெரியவில்லை.
நன்கொடையாளரின் முகத்தின் ஒரு பகுதியையும், முழு இடது கண்ணையும் அகற்றி, அவற்றை பெறுநருக்கு அறுவை சிகிச்சை மூலம் சேர்க்கப்பட்டது.
46 வயதான ஆரோன் ஜேம்ஸ், என்பவர் அமெரிக்காவின் ராணுவத்தில் பணிபுரிந்தவர்.
அவரது இடது கண், இடது முழங்கைக்கு மேல் பகுதி, மூக்கு, உதடுகள், முன் பற்கள், இடது கன்னத்தின் எலும்பு உட்பட பல பகுதிகள், ஒரு மின் விபத்தில் பாதிக்கப்பட்டது.
card 2
21 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சை
முழுக் கண்ணையும் மாற்றுவது நீண்ட காலமாக மருத்துவ அறிவியலின் ஒரு சவாலாக இருந்துள்ளது.
இப்படி ஒரு உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உயிருள்ள ஒருவருக்கும் செய்யப்படவில்லை.
இந்த அறுவைசிகிச்சை முடிய 21மணி நேரம் ஆனதாக கூறப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட கண், நல்ல ஆரோகியத்துடன் இருந்தாலும், விழித்திரைக்கு நேரடியாக இரத்த ஓட்டம் உள்ளது என்றாலும், ஜேம்ஸ் மீண்டும் பார்வை பெறுவார் என்பதில் மருத்துவர்கள் இன்னும் உறுதியாக இல்லை.
தொடர் நரம்பு மீளுருவாக்கம் சிகிச்சைகள் மூலமே, அவருக்கு பார்வை திரும்ப கிடைக்குமா என்பது தெரியவருமென மருத்துவர்கள் குழு தெரிவிக்கிறது.
இருப்பினும், இது பெரும் மருத்துவ சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஒருவேளை, அந்த நபருக்கு பார்வை தெரிந்தால், பார்வையற்றோர் பலருக்கும் இதன்மூலம் மறுவாழ்வு கிடைக்கக்கூடும் என மருத்துவகுழு கூறியுள்ளது.