
அணுசக்தி நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
உக்ரைன் தனது 34-வது சுதந்திர தினத்தை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) கொண்டாடிய நிலையில், ரஷ்யாவுடனான போர் தீவிரமடைந்தது. ரஷ்யா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள், ஏவுகணை வீச்சுகள் ஆகியவை தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துள்ளன. மேற்கு குர்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு அணுசக்தி நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது உட்பட, உக்ரைன் ஒரு பெரிய டிரோன் தாக்குதல் அலையைத் தொடங்கியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனிய டிரோன்கள் குர்ஸ்க் பகுதியிலுள்ள ஒரு அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் தீ விபத்து ஏற்பட்டதாக ரஷ்யா கூறியது. சேதமடைந்த மின்மாற்றியால் ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், கதிர்வீச்சு அளவு பாதுகாப்பான வரம்புகளுக்குள் இருப்பதாகவும் அணுமின் நிலையத்தின் செய்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு
அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு
அணுசக்தி நிலையங்கள் அனைத்தையும் பாதுகாப்பது அவசியம் என சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இயக்குநர் ஜெனரல் வலியுறுத்தினார். இதற்கிடையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 95 உக்ரேனிய டிரோன்களை இடைமறித்து தாக்கியதாகக் கூறியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யா 72 டிரோன்கள் மற்றும் ஒரு ஏவுகணையை உக்ரேனிய பிரதேசத்திற்குள் ஏவியதாகவும், அவற்றில் 48 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்தது. கீவ் நகரிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் பேசிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, உக்ரைனின் மீள்திறன் மற்றும் அமைதியான எதிர்காலத்திற்கான அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.