LOADING...
"நாங்கதான் மிடில் ஈஸ்ட்டோட கார்டியன் ஏஞ்சல்!" ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு சுங்கம் வசூலிக்க டிரம்ப் மாஸ்டர் பிளான்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அமெரிக்கா சுங்கக்கட்டணம் விதிக்கும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

"நாங்கதான் மிடில் ஈஸ்ட்டோட கார்டியன் ஏஞ்சல்!" ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு சுங்கம் வசூலிக்க டிரம்ப் மாஸ்டர் பிளான்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 21, 2026
10:47 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான 60 நாட்கள் தற்காலிகப் போர் நிறுத்தக் காலத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு எந்தவித சுங்கக்கட்டணமும் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளார். எனினும், சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் கார்டியன் ஏஞ்சல் என்ற முறையில், கடந்த கால மற்றும் எதிர்காலப் பாதுகாப்புச் செலவினங்களை ஈடுகட்ட அமெரிக்கா சார்பில் ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப்

ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிக்கை

தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், 60 நாட்கள் போர் நிறுத்தக் காலத்திலும், அதன் பின்னரும் ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறினால் எவ்வித சுங்கக்கட்டணமும் வசூலிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அமைதி உடன்படிக்கை முழுமையடையாமல் போனால், மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாவலனாக அமெரிக்கா ஆற்றிய சேவைகளுக்காகவும், அதற்கான செலவுகளைத் திரும்பப் பெறுவதற்காகவும் அமெரிக்காவால் மட்டுமே இந்த சுங்கக்கட்டணம் விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஈரான் மிரட்டல்

ஜலசந்தியை மூடுவதாக ஈரான் விடுத்த மிரட்டலும் அமெரிக்காவின் பதிலும்

லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்கா தனது போர் நிறுத்த வாக்குறுதிகளை செயல்படுத்தத் தவறியதைக் கண்டித்து, ஹார்முஸ் ஜலசந்தியை முற்றிலும் மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) சனிக்கிழமையன்று (ஜூன் 20) அறிவித்திருந்தது. ஈரானின் இந்த மிரட்டல் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இருப்பினும், சனிக்கிழமையன்று மட்டும் 17 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெயை சுமந்து கொண்டு 55 வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாக இப்பாதையைக் கடந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement

லெபனான்

லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் நீடிக்கும் கடுமையான விரிசல்கள்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான இந்த 60 நாட்கள் அணுசக்திப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு லெபனானில் முழுமையான போர் நிறுத்தம் ஏற்படுவது ஒரு முதன்மை நிபந்தனையாக இருந்தது. ஆனால், போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அமைதிப் பேச்சுவார்த்தை

சுவிட்சர்லாந்தில் இன்று தொடங்கும் உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை

மறுபுறம், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திட்டமிட்டபடி தொடங்கவுள்ளது. இதற்காக அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் சுவிட்சர்லாந்திற்குப் புறப்பட்டுள்ளார். ஈரானிய தரப்பில் அந்நாட்டின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு ஏற்கனவே சுவிட்சர்லாந்து சென்று சேர்ந்துள்ளது. அமெரிக்காவின் முதன்மை நடுவர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் பேச்சுவார்த்தைக்கான தொழில்நுட்பப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

லெபனான்

லெபனான் விவகாரம் குறித்து அமெரிக்கத் துணை அதிபர் நம்பிக்கை

செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த துணை அதிபர் ஜேடி வான்ஸ், லெபனானில் தற்போது பதற்றமான செய்திகள் வெளியான போதிலும், கள நிலவரம் படிப்படியாக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய இரு நாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இந்த விவகாரத்தை அமெரிக்கா தொடர்ந்து கையாளும் என்றும் அவர் கூறினார். மேலும், பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையே எட்டப்பட்ட 14 அம்ச இடைக்கால ஒப்பந்தத்தின்படி, இந்த அமைதிப் பேச்சுவார்த்தை நல்லதொரு தீர்வை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement