சிங்கப்பூர்: அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தும் அரசு
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் (MOH) பொதுவெளியில் செல்லும்போது தொற்றால் பாதிக்கப்படாதவர்களும் முகக்கவசம் அணிய வலியுறுத்தியுள்ளது. மேலும், குறிப்பாக வீட்டிற்குள் அல்லது பாதிக்கப்படக்கூடிய நபர்களைப் பார்க்கும்போது, முகக்கவசம் அணிவதை சிங்கப்பூர் அரசு "வலுவாக ஊக்குவிக்கிறது." டிசம்பர் 3 முதல் 9ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில், 56,043 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இது அதற்கு முந்தைய வாரத்தை விட 75% அதிகம் எனவும் சுகாதாரத்துறை கூறுகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 225லிருந்து, 350 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தீவிர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையும், 9 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அண்மையில், சிங்கப்பூரில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் பரவி வரும் JN.1 வகை கொரோனா
பெரும்பாலானோர் JN.1 வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது BA.2.86 இன் துணைப் பிரிவு ஆகும். இந்தியாவில் கேரளாவில் இந்த வகை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட மற்றும் சமூகப் பொறுப்பைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ள சுகாதார அமைச்சகம், கடுமையான சுவாச நோய்த்தொற்று அறிகுறிகளுடன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் வீட்டிலேயே இருக்கவும், மற்றவர்களுடன் தொடர்பைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது. தீவிர நோய் தொற்று ஏற்படுபவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தீவிர நோய் தொற்று ஏற்பட்டவர்கள் மட்டும் மருத்துவமனையை அணுக சுகாதார அமைச்சகம் வேண்டுகோள்விடுத்துள்ளது. மேலும் டிசம்பர் 19ஆம் தேதி முதல் தினசரி கொரோனா தொற்று பாதிப்பை, வெளியிடுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.