
முகமது முய்சு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்; காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
முன்னாள் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், ஜனாதிபதி முகமது முய்சுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா தொடர்பான ஒப்பந்தங்களில் எந்தவொரு தீவிரமான கவலைகளும் இல்லை என்று ஜனாதிபதி ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் தனது அரசியல் லாபத்திற்காக ஏமாற்றியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
2023 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்களை தவறாக வழிநடத்தி இந்தியாவுக்கு எதிராக தூண்டியதாக, முய்சு முறையான மன்னிப்பு கேட்க வேண்டும் என ஷாஹித் வலியறுத்தி உள்ளார்.
தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்தியாவுடனான பாதுகாப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் மாலத்தீவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், இந்திய ராணுவ வீரர்களை நாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்றும் முய்சு வலியுறுத்தினார்.
யு டர்ன்
யு டர்ன் அடித்த முகமது முய்சு
இருப்பினும், முய்சுவின் சமீபத்திய ஒப்புதல் வாக்குமூலம் அவரது முந்தைய நிலைப்பாட்டிற்கு முரணானது என்றும், தேர்தலில் வெற்றி பெற உதவிய அந்த குற்றச்சாட்டு பொய்யாகி உள்ளது என்றும் ஷாஹித் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு எக்ஸ் பதிவில், தவறான பிரச்சாரம் மாலத்தீவின் சர்வதேச நற்பெயரை சேதப்படுத்தியது மற்றும் இந்தியாவுடனான அதன் பாரம்பரியமாக வலுவான உறவுக்கு தீங்கு விளைவித்தது என்று ஷாஹித் கூறினார்.
முய்சுவின் தலைமையின் கீழ், குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி மாலத்தீவு அமைச்சர்கள் இழிவான கருத்துக்களை வெளியிட்ட பிறகு, இந்தியா-மாலத்தீவு உறவுகள் கொந்தளிப்பை சந்தித்தன.
எனினும், முய்சு அரசாங்கம் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்ததோடு, இந்தியாவிற்கு வந்து பிரதமரை சந்தித்துவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.