LOADING...
நேபாளத்தில் அதிரடி அரசியல் திருப்பம்: புதிய பிரதமர் பதவியேற்ற உடனேயே முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது
நேபாளத்தில் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது

நேபாளத்தில் அதிரடி அரசியல் திருப்பம்: புதிய பிரதமர் பதவியேற்ற உடனேயே முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது

எழுதியவர் Sekar Chinnappan
Mar 28, 2026
08:20 am

செய்தி முன்னோட்டம்

நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நேபாளத்தை உலுக்கிய ஜென் ஜி போராட்டங்களின் போது நடந்த உயிரிழப்புகளுக்குக் காரணமான அடக்குமுறை நடவடிக்கைகளுக்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

கைது

குண்டு பகுதியில் உள்ள இல்லத்தில் வைத்து கைது

நேபாள காவல்துறையினர் இன்று அதிகாலை பக்தபூரில் உள்ள குண்டு பகுதியில் அமைந்திருக்கும் கே.பி.சர்மா ஒலியின் இல்லத்தை முற்றுகையிட்டு அவரைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒலியுடன் சேர்த்து, அவரது ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் லெக்ஹாக் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற போராட்டங்களை ஒடுக்கத் தவறான உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போராட்டம்

77 பேர் பலியான ஜென் ஜி போராட்டப் பின்னணி

கடந்த ஆண்டு செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், நாட்டின் பொருளாதாரச் சீர்கேட்டிற்கு எதிரான ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறியது. ஜென் ஜி தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் அடக்குமுறையால் 77 பேர் உயிரிழந்தனர், இதில் பல மைனர்களும் அடங்குவர். போராட்டத்தின் இரண்டாவது நாளில் நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதால் ஒலியின் அரசாங்கம் கவிழ்ந்தது.

Advertisement

சட்டம்

சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எவரும் இல்லை என உள்துறை அமைச்சர் பேச்சு

ஒலியின் கைதுக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நேபாளத்தின் புதிய உள்துறை அமைச்சர் சூடன் குருங், "கொடுத்த வாக்குறுதி என்பது வாக்குறுதிதான், சட்டத்திற்கு மேல் எவரும் கிடையாது" என்று குறிப்பிட்டுள்ளார். இது யாரையும் பழிவாங்கும் நோக்கத்தில் செய்யப்பட்ட நடவடிக்கை அல்ல என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரு ஆரம்பம் மட்டுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை நேபாள அரசியலில் ஒரு புதிய திசையை உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

பரிந்துரை

அரசு ஆதரவு அறிக்கையின் பரிந்துரை

நேபாள அரசு அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கையில், போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்த நேரடியாக உத்தரவிடப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றாலும், துப்பாக்கிச் சூட்டைத் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்போதைய பிரதமர் ஒலி மற்றும் உயர் அதிகாரிகளின் அலட்சியமான போக்கினாலேயே விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. இதன் அடிப்படையிலேயே தற்போதைய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement