Page Loader
மாலத்தீவில் கடும் பொருளாதார நெருக்கடி; அதிபரின் சம்பளம் 50 சதவீதம் குறைப்பு
மாலத்தீவில் பொருளாதார நெருக்கடியால் அதிபரின் சம்பளம் 50 சதவீதம் குறைப்பு

மாலத்தீவில் கடும் பொருளாதார நெருக்கடி; அதிபரின் சம்பளம் 50 சதவீதம் குறைப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 25, 2024
12:04 pm

செய்தி முன்னோட்டம்

மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு, நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு, தனது ஊதியத்தில் 50% குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் 100,000 ரூபியாவுக்கு பதிலாக, முகமது முய்சு இனி மாதம் 50,000 ரூபியாவை மட்டுமே ஊதியமாக பெறுவார். தன்னுடைய ஊதியத்தை குறைத்தது போலவே, அரசு நிறுவனங்களில் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 10% சம்பளக் குறைப்பை அறிமுகப்படுத்தினார். பொதுத்துறை செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த ஊதிய வெட்டுக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மூசா ஜமீர், அரசியல் ரீதியாக நியமனம் பெற்றவர்களுக்கான ஊதியம் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த சம்பளக் கட்டமைப்பில் 4%க்கும் குறைவான பங்களிப்பை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

வரவு செலவுத் திட்டம்

2025 தேசிய வரவு செலவுத் திட்டம்

இந்த சிக்கன நடவடிக்கைகள் மாலத்தீவு அரசாங்கத்தின் 2025 தேசிய வரவு செலவுத் திட்டத்துடன் ஒத்துப்போகின்றன. 2023ஆம் ஆண்டில் நாட்டின் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 122.9% ஐ எட்டியதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது தொற்றுநோய் தொடர்பான கடன் மற்றும் முந்தைய உள்கட்டமைப்பு திட்டங்களின் காரணமாக ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஃபிட்ச் போன்ற உலகளாவிய ஏஜென்சிகள் மாலத்தீவின் கடன் மதிப்பீட்டைக் குறைத்துள்ளன. இது குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டுக் கடன் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மோசமான நிலையைத் தவிர்க்க, மாலத்தீவுகள் ஆண்டுதோறும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை 2026ஆம் ஆண்டுக்குள் பாதுகாக்க வேண்டும். பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் நிதிச் சீர்திருத்தங்களுக்கு மத்தியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7% ஆகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.