இந்திய மாம்பழங்களுக்கு மீண்டும் தடை விதித்த ஜப்பான்: 20 ஆண்டுகால வர்த்தகம் பாதிப்பு - என்ன காரணம்?
செய்தி முன்னோட்டம்
இந்திய மாம்பழங்களை ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்யும் 20 ஆண்டுகால வர்த்தக நடைமுறை, நடப்பு 2026 ஆம் ஆண்டு மாம்பழ சீசனில் ஜப்பான் நாட்டின் புதிய தடையின் காரணமாக அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்திய மாம்பழ பதப்படுத்தும் மையங்களை ஆய்வு செய்த ஜப்பானிய குவாரன்டைன் அதிகாரிகள், அங்குள்ள பூச்சிக் கட்டுப்பாட்டு நடைமுறைகளில் சில முக்கியக் குறைபாடுகளைக் கண்டறிந்தனர். இதன் விளைவாக, மார்ச் 25, 2026 அல்லது அதற்குப் பிறகு இந்தியாவில் வழங்கப்பட்ட ஆய்வுச் சான்றிதழ்களைக் கொண்ட மாம்பழங்களை ஏற்க முடியாது என யோகோஹாமா தாவர பாதுகாப்பு சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக இந்தியாவின் புகழ்பெற்ற ஏற்றுமதி ரக மாம்பழங்களின் ஏப்ரல்-ஜூன் வரையிலான உச்சக்கட்ட ஏற்றுமதி முற்றிலும் முடங்கியுள்ளது.
தொழில்நுட்பக் குறைபாடுகள்
மாம்பழங்களில் உள்ள பழ ஈக்களை ஒழிக்கும் வேப்பர் ஹீட் ட்ரீட்மென்ட் ஆய்வில் நேர்ந்த சொதப்பல்
ஜப்பான் நாட்டின் கடுமையான இறக்குமதி விதிகளின்படி, இந்திய மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்பாக வேப்பர் ஹீட் ட்ரீட்மென்ட் (VHT) எனப்படும் ரசாயனமற்ற நீராவி வெப்பச் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாம்பழங்களில் பழ ஈக்கள் மற்றும் பிற பூச்சிகள் பரவுவதைத் தடுப்பதற்காக, இரு நாடுகளுக்கு இடையே உள்ள இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்தச் சுத்திகரிப்பு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் உத்தரபிரதேசத்தின் ரஹ்மான்பூரில் உள்ள விஎச்டி (VHT) மையத்தில் ஜப்பானிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கிருமிநாசினி மற்றும் புகை சுத்திகரிப்பு (Fumigation) வழிமுறைகளில் போதிய தரம் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இந்தத் தொழில்நுட்பக் குறைபாடுகள் முழுமையாகச் சரிசெய்யப்பட்டு ஜப்பானிய அதிகாரிகள் திருப்தியடையும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு வர்த்தக வரலாறு
கடந்த 1986இல் விதிக்கப்பட்டு 2006இல் நீக்கப்பட்ட மாம்பழ வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னணி விபரங்கள்
இதற்கு முன்னதாக கடந்த 1986 ஆம் ஆண்டில், மாம்பழங்களில் பழ ஈக்கள் தொற்று இருப்பதாகக் கூறி இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் முதன்முதலில் 20 ஆண்டுகால நீண்ட தடையை விதித்திருந்தது. பின்னர் இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்தும் அடையாளமாக, பல்வேறு கடுமையான நிபந்தனைகளுடன் கடந்த 2006 ஜூன் 23 அன்று இந்தத் தடை அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற மையங்களில் மட்டுமே மாம்பழங்கள் பதப்படுத்தப்பட வேண்டும். மேலும் அல்போன்சா, கேசர், பங்கனபள்ளி, லங்கடா, சௌசா மற்றும் மல்லிகா ஆகிய 6 குறிப்பிட்ட மாம்பழ வகைகளை மட்டுமே ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மாம்பழச் சந்தை நிலவரம்
உலகளாவிய இந்திய மாம்பழ வர்த்தகத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் ஜப்பான் சந்தையின் மதிப்பு
இந்தியாவின் ஒட்டுமொத்த மாம்பழ ஏற்றுமதியில் யுஏஇ, அமெரிக்கா, பிரிட்டன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளே முதன்மைச் சந்தைகளாகத் திகழ்கின்றன. கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியா உலகளவில் சுமார் 29,938 மெட்ரிக் டன் புதிய மாம்பழங்களை ஏற்றுமதி செய்து 56.50 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. ஜப்பானுக்கான மாம்பழ ஏற்றுமதியின் மதிப்பு 2025-26 இல் 1.54 மில்லியன் டாலராகக் குறைவாக இருந்தாலும், அங்கு மாம்பழங்களுக்குப் பிரீமியம் விலைக் கிடைப்பதால் இந்தத் தடை ஏற்றுமதியாளர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குஜராத்தின் கேசர் மாம்பழங்களே ஜப்பான் சந்தையில் அதிகளவில் விற்பனையாகி வந்த நிலையில், தற்போதைய தடையானது குறிப்பிட்ட சில பிரீமியம் ஏற்றுமதியாளர்களைப் பெரிதும் பாதித்துள்ளது.
ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் சவால்கள்
அதீத கோடை வெப்பம் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து கட்டண உயர்வால் தவிக்கும் இந்திய மாம்பழ ஏற்றுமதியாளர்கள்
ஜப்பானின் இந்த அதிரடித் தடையானது, ஏற்கனவே பல்வேறு இயற்கை மற்றும் பொருளாதாரச் சவால்களைச் சந்தித்து வரும் இந்திய மாம்பழ ஏற்றுமதித் துறைக்குக் கூடுதல் சுமையாக மாறியுள்ளது. நடப்பு சீசனில் மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் நிலவிய கடுமையான கோடை வெப்ப அலையின் காரணமாக, சர்வதேச சந்தையில் அதிக மதிப்புடைய அல்போன்சா மாம்பழ உற்பத்தி ஏற்கனவே பெருமளவு சரிவடைந்துள்ளது. இத்துடன், மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ப் பதற்றங்கள் காரணமாகக் கடல்வழி சரக்குப் போக்குவரத்துச் செலவுகள் அசுர வேகத்தில் உயர்ந்துள்ளதும் அழுகும் பொருட்களான மாம்பழ ஏற்றுமதியைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தத் தடையை நீக்குவது குறித்து இந்தியாவின் அபெடா அமைப்பும் ஜப்பான் தாவர பாதுகாப்பு நிலையமும் தற்பொழுது வரை எவ்வித அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்த காலக்கெடுவையும் அறிவிக்கவில்லை.