இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்க, பேச்சுவார்த்தைகள் தீவிரம்
இஸ்ரேல்-ஹமாசிடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்க, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் கத்தார் முன்னிலையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பின் திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. கிட்டத்தட்ட ஏழு வாரங்களாக தொடர்ந்து வந்த போரில், கடந்த வெள்ளிக்கிழமை இருதரப்பினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, நான்கு நாட்கள் போர் நிறுத்தம் தொடங்கியது. இதில், 50 இஸ்ரேலி பணயக் கைதிகளும், அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தத்திற்கு பின், போர் நிறுத்தம் மீண்டும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்தம் இன்று முடிவடைகிறது.
போர் நிறுத்தத்தில் முன் வைக்கப்படும் நிபந்தனைகள் என்ன?
ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், ஒவ்வொரு 10 பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் போதும், ஒரு நாள் போர் நிறுத்தம் அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் தற்போது பணயக் கைதிகளாக உள்ள ராணுவ வீரர்களையும் விடுவிக்க கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அக்டோபர் 7 ஆம் தேதி, 240க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்து சென்ற நிலையில், தற்போது வரை, 66 இஸ்ரேலிகள், 20 வெளிநாட்டவர்கள் என 86 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலாக, இஸ்ரேல் சிறைகளில் இருந்த 180 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
காசாவில் இன்னும் எத்தனை பணயக் கைதிகள் உள்ளனர்?
காசா பகுதியில் இன்னமும் 126 ஆண்கள் மற்றும் 35 பெண்கள் என, 161 நபர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர்களில் 10 பேர் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், 4 பேர் 18 அல்லது 19 வயதுடையவர்கள், 4 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் பத்து மாத கைக்குழந்தையும் அடங்கும். மேலும், 161 பணயக் கைதிகளில், 146 இஸ்ரேலிகள் என்றும், 15 நபர்கள் அமெரிக்கர்கள் உட்பட்ட பிற நாட்டவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி பிடித்துச் செல்லப்பட்ட அனைத்து பணயக் கைதிகளும், ஹமாஸ் வசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?
இரண்டு மாதத்தை நெருங்கி வரும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில், தற்போது வரை 15,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் நிர்வகிக்கும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் குறைந்தது 40% பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் தாக்குதலில் 36,000 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 நபர்கள் கொல்லப்பட்டனர். 6,900 ஹலோஇஸ்ரேலிகள் காய்மடைந்தனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில், போர் தொடங்கியதற்கு பின்னர் வன்முறை வெடித்தது. அக்டோபர் 7 முதல் இஸ்ரேலியப் படைகள் குறைந்தபட்சம் 239 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளதாக பாலஸ்தீனிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.