AI-யால் இருண்ட கற்பனைகளில் மூழ்கி குடும்பத்தினரையே கொன்ற இந்திய வம்சாவளி பதின்வயது இளைஞர்
செய்தி முன்னோட்டம்
மாசசூசெட்ஸின் ஆக்டன் நகரில் உள்ள தனது வீட்டில், தனது தாயையும், தம்பியையும் கொலை செய்ததாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த 17 வயது இளைஞரான அர்ஜுன் அரவிந்த் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இறந்தவர்கள் சுதா வெங்கடேசன் (45) மற்றும் சித்தார்த் அரவிந்த் (14) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை, ஒரு ஆசிரியை ஒரு சந்திப்பிற்காக வந்தபோது வீட்டிற்குள் நுழைய முடியாததால் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் அவர் அர்ஜுனின் தந்தையை தொடர்பு கொண்டார், அவராலும் தனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
குற்ற நிகழ்விடம்
இறந்தவர்களுக்கு 'வெளிப்படையான காயம்' இருந்தது
அன்று காலை வேலைக்கு கிளம்புவதற்கு முன்பு கடைசியாக தன் மனைவியை பார்த்த தந்தை, பின்னர் ஆக்டன் காவல் துறையிடம் விசாரிக்குமாறு கோரினார்.
அங்கு வந்த அதிகாரிகள், இருவரும் "வெளிப்படையான காயங்களுடன்" இறந்து கிடப்பதை கண்டறிந்தனர்.
சுதா அடித்தளத்திலும், சித்தார்த் முதல் தளத்திலும் கண்டெடுக்கப்பட்டனர்.
தலைமை மருத்துவப் பரிசோதகரின் அறிக்கைக்காக புலனாய்வாளர்கள் காத்திருப்பதால், மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
கொலைகளில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தின் வகையும் விசாரணையில் உள்ளது.
விசாரணை முன்னேற்றம்
அர்ஜுன் ChatGPT-ல் குடும்பத்தை கொலை செய்யும் முறையை தேடியுள்ளான்
கொலைகளை செய்ததாக கூறப்பட்ட பின்னர், தனது தாயின் ஹோண்டா அக்கார்டு காரில் தப்பிச் சென்ற அர்ஜுன், பின்னர் வேய்லாண்டில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் தொடர்பில்லாத ஓர் எச்சரிக்கை அழைப்பின்போது கைது செய்யப்பட்டார்.
சம்பவத்திற்கு முன்பே அர்ஜுன் கவலையளிக்கும் வகையில் நடந்துகொண்டிருந்ததாக மிடில்செக்ஸ் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
"தன் குடும்பத்தை கொல்வது தொடர்பான தத்துவார்த்த எண்ணங்கள் அல்லது கற்பனைகளை தேடுவதற்காக இணையத்தையும் சாட்ஜிபிடியையும் பயன்படுத்துவது உட்பட, அர்ஜுன் சமீபகாலமாக கவலைக்குரிய நடத்தையை வெளிப்படுத்தி வந்துள்ளான் என்று அதனைத் தொடர்ந்த விசாரணை சுட்டிக்காட்டுகிறது," என அது கூறியது.
சட்ட நடவடிக்கைகள்
அர்ஜுன் ஓராண்டுக்கு முன்பு காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது
"தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல்கள் விடுவது போல் தோற்றம் தரும்" செயல்களில், "கற்பனைகளையும், கதைகளையும், ஒருவகையில் கோதிக் நாவல் பாணியிலான கதைகளையும் உருவாக்கவும், கேள்விகள் கேட்கவும், கதாபாத்திரங்களைப் புனையவும்" அவர் ChatGPT-ஐப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது என மிடில்செக்ஸ் மாவட்ட வழக்கறிஞர் மரியன் ரியான் தெரிவித்தார்.
இரண்டு கொலைக் குற்றங்கள், தாக்குதல், காயம் ஏற்படுத்துதல், அனுமதியின்றி வாகனத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அர்ஜுன் எதிர்கொள்கிறார்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அர்ஜுன் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டதாகவும், இறுதியில் ஆக்டன் காவல் அதிகாரிகளின் உதவியுடன் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தலைமை அதிகாரி டக்ளஸ் ஸ்டர்னியோலோ தெரிவித்தார்.
விசாரணை நடைபெற்று வருகிறது, ஆனால் பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.