Page Loader
ஜூலை 16ஆம் தேதி ஏமனில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இந்திய செவிலியர் நிமிஷா பிரியா
ஏமனில் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் செவிலியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது

ஜூலை 16ஆம் தேதி ஏமனில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இந்திய செவிலியர் நிமிஷா பிரியா

எழுதியவர் Venkatalakshmi V
Jul 09, 2025
09:31 am

செய்தி முன்னோட்டம்

எதிர்வரும் ஜூலை 16ஆம் தேதி, ஏமனில் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் செவிலியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இந்தச் சம்பவம், இந்தியாவில் மட்டுமல்லாது, சர்வதேசளவிலும் கவலைக்குரியதாக மாறியுள்ள நிலையில், இந்த வழக்கில் அவரை மீட்க ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு ஏமனில் நிலவும் உள்நாட்டுப் போர் முக்கிய காரணமாக உள்ளது. கேரளாவின் பாலக்காடை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா (வயது 37), 2017-ஆம் ஆண்டு, ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியை கொன்றதாக கைது செய்யப்பட்டார். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு தற்போது அவர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

சம்பவம்

மரணத்திற்கு வழிவகுத்த சம்பவம்

ஏமனில் செவிலியர் பணிக்கு சென்ற பிரியாவின் பாஸ்போர்ட்டை கைப்பற்றியதாகக் கூறப்படும் மஹ்தியின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க, அவர் அவரை மயக்க மருந்துகளால் மயக்க திட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதிக அளவு மருந்து காரணமாக மஹ்தி உயிரிழந்தார். இதையடுத்து பிரியா கைது செய்யப்பட்டார். அவரது சக ஊழியர் ஹனானும் மஹ்தியின் உடலை அழிக்க உதவியதாக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். 2024-இல் ஹவுத்தி குழுவின் கட்டுப்பாட்டில் செயல்படும் சனாவின் உச்ச நீதிமன்றம், பிரியாவுக்கு மரண தண்டனை உறுதிசெய்தது. தற்போது, சனாவில் உள்ள சிறையில் அவர் உள்ளார்.

சிக்கல்

வழக்கு ஏன் சிக்கலானது?

ஏமனில் உள்நாட்டுப் போர் நீடித்து வரும் நிலையில், நாட்டின் ஹவுத்தி குழுவும், சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசும் இரு வேறு ஆட்சிகளை செயல்படுத்தி வருகின்றன. இந்திய அரசுக்கும் ஹவுத்தி குழுவுக்கும் நேரடி இராஜதந்திரத் தொடர்புகள் இல்லாததால், வழக்கில் தலையிடும் முயற்சிகள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இஸ்லாமிய சட்டப்படி, "தியத்" எனப்படும் இரத்தப்பணம் செலுத்தி தண்டனைத் தீர்வுக்காக வழிவகுக்கும் முயற்சிகளும் நிறைவேறவில்லை. இந்தியா தற்போது பிரியாவின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்தது. "உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிரியாவை காப்பாற்றுவதற்கான அனைத்து சாத்தியமான வழிகளும் தேடப்பட்டு வருகின்றன," என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.